மியான்மரில் தோண்ட தோண்ட கிடைக்கும் சடலங்கள்.. 3000-ஐ கடந்த பலி எண்ணிக்கை..!
மியான்மர் நாட்டில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது.
மியான்மர் நாட்டை அடுத்தடுத்துன் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் புரட்டிப்போட்டன. மியான்மர் நாட்டு மக்களின் நிலை கவலைக்கிடத்தில் உள்ளது. கண் இமைக்கும் நேரத்தில் சீட்டுக் கட்டுகள் போல அடுக்குமாடி குடியிருப்புகள் சரிந்து விழுந்த நிகழ்வுகள் காண்போரை பதைபதைக்க செய்தது. தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள், வீடுகள் என எண்ணற்ற கட்டடங்கள் நில நடுக்கத்தால் உருக்குலைந்தன. ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவாகியதால் மக்கள் அச்சமடைந்தனர்.
குறிப்பாக தலைநகர் நேபிடா, மண்டலாய் உட்பட 6 மாகாணங்களில் பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. ஏற்கனவே ஏற்பட்ட 2 நிலநடுக்கங்கள் கடும் சேதத்தை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் நள்ளிரவில் நிகழ்ந்த நிலநடுக்கம் மியான்மர் மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தியது. இதனால் சாலைகளிலேயே மக்கள் தஞ்சம் அடைந்தனர்.
இதையும் படிங்க: நாட்டையே உலுக்கி வரும் பூகம்பங்கள்..! இயற்கையின் எச்சரிக்கை மணியா? கதிகலங்கும் மக்கள்..!
நிலநடுக்கம் ஏற்பட்டு ஒருவாரம் ஆன நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன. ஆனால், சாலைகளில் விரிசல்கள் ஏற்பட்டதால், மீட்புப் பணிகளை மேற்கொள்வது சவாலாக உள்ளது. இடிந்து விழுந்த கட்டடங்களுக்குள் இருந்து குவியல் குவியலாக உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
மியான்மர் நாட்டு மக்களுக்காக இந்தியாவில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், மருத்துவ உதவிகளுக்கு குழுவையும் அனுப்பி வைத்தது. இந்த நிலையில், நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 145 ஆக அதிகரித்துள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இது குறித்து அந்நாட்டு அமைச்சர் மவுங் மவுங் ஓன் கூறுகையில், 4,589 பேர் காயமடைந்துள்ளதாகவும் 221 பேர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது என்றும் கூறினார். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மருந்து, உணவு மற்றும் தங்குமிடங்களை, அரசுடன் இணைந்து பல தனியார் நிறுவனங்கள் தொண்டு செய்து வருவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: கவலைக்கிடத்தில் மியான்மர்.. 2,000-ஐ கடந்த பலி எண்ணிக்கை..! நிவாரண பணியில் இந்தியா..!