நெல்லையில் பெட்ரோல் குண்டு வீச்சு.. ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வீட்டில் நடந்த பயங்கரம்.. இருவர் கைது..!
நெல்லையில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வீட்டில் முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் பழவூரை அடுத்த ஆவரைகுளம் அருகே உள்ள சவுந்தரலிங்கபுரத்தை சேர்ந்தவர் மணி. இவர் அதேபகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் விஜயன் வயது 37.. ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு இவரது வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். அதிர்ச்சி அடைந்த விஜயன், சிசிடிவி காட்சிகளை செக் செய்து பார்த்த போது, 2 நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி ஓடியது தெரிந்தது. இதுகுறித்து கூடங்குளம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: எமனாக மாறிய இ - பைக்.. பேட்டரி வெடித்து பெண் பரிதாப பலி..!
அந்த பகுதிகளில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது, ஆவரைக்குளத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரது மகன் சாமிதுரை. (வயது 21) என்பவர், தனது நண்பரான ஹரிகரன் (வயது 21) என்பவருடன் சேர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் வலைவீசி தேடினர். ஆனால் அவர்கள் எந்த சம்பவமும் நடக்காதது போல, இரண்டு பேரும் தங்களது வீடுகளில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். இதையடுத்து இரண்டு பேரையும் போலீசார் பிடித்து வந்து போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
சாமிதுரையின் தந்தை ராமகிருஷ்ணன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனது நண்பர் ஒருவருடன் மணி வைத்துள்ள டீக்கடைக்கு டீ குடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ராமகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகி உள்ளது. இதனை மணி சமரசம் செய்ய முயன்றபோது அவர் தாக்கப்பட்டார்.
இதனால் மணி மகன் விஜயன், ஆவரைகுளம் சென்று ராமகிருஷ்ணனிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பதிலுக்கு ஆத்திரத்தில் விஜயன் வீட்டில் சாமிதுரை மற்றும் அவரது நண்பர் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஆசை ஆசையாய் இருட்டுக்கடை அல்வாவை ருசி பார்த்த முதல்வர்... வாயில் போட்ட மறுகணமே கேட்ட அந்த கேள்வி...!