பறிபோன விவசாய தம்பதியின் உயிர்.. கொலையில் முடிந்த கோழி மேய்ச்சல் பிரச்சனை.. உறவினர் கைது..!
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே விவசாயத் தம்பதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அவர்களின் உறவினர் ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த துலுக்கமுத்தூர் பெரிய தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. வயது 82. அவரது மனைவி பர்வதம். வயது 75. இந்த வயது முதிர்ந்த தம்பதியர் தங்களது தோட்டத்து வீட்டில் தங்கி விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளனர். மூன்று பேருக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டின் அருகில் 46 வயதான உறவினர் ரமேஷ் என்பவருக்கு திருமணம் ஆகாமல் இருந்து வந்துள்ளார்.
ரமேஷ் தனது வீட்டில் கோழி, ஆடு போன்ற கால்நடைகளை வளர்த்து வரும் நிலையில், இவரது கோழி அவ்வப்பொழுது பழனிச்சாமி தோட்டத்திற்குள் புகுந்து தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பழனிச்சாமியும் அவரது மனைவி பர்வதமும் உறவினர்ரமேஷிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர் இந்நிலையில் நேற்று இரவு கோழி மேய்ச்சல் காரணமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ் இருவரையும் வெட்டி கொலை செய்துள்ளார்.
இதையும் படிங்க: தனியாக இருந்த முதியவர்கள் அடித்துக்கொலை.. வீட்டிற்கு தீ வைத்த கும்பல்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!
பின்னர் மது போதையில் இவர் தப்பிச் செல்லும் பொழுது இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து காயம் அடைந்தார். தற்போது திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். காலை பழனிச்சாமி வீடு திறந்து இருப்பதை கண்ட அப்பகுதியினர் உள்ளே சென்று பார்த்த பொழுது தம்பதியர் ரத்த வெள்ளத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவினாசி போலீசார், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்தனர். வீட்டில் பணம், நகை போன்ற பொருட்கள் அப்படியே இருந்ததால், கொள்ளை காரணமாக கொலை நடக்கவில்லை என போலீசார் உறுதிபடுத்தினர். கொலையான பழனிசாமிக்கு யாராவது விரோதிகள் உள்ளனரா? முன் விரோதம் உள்ளதா? என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ரமேஷ் இவர்களிடம் தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ரமேஷை தேடிய போது அவர் தலைமறைவானது தெரியவந்தது. இது போலீசாரின் சந்தேகத்தை அதிகப்படுத்தியது.
இதைத் தொடர்ந்து போலீசார் அவரின் மொபைல் எண்ணை ட்ராக் செய்ய துவங்கினர். இதற்கிடையே ரமேஷ் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர ரமேஷை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோழி மேய்ச்சல் சண்டை இரட்டை கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: தனியாக இருந்த முதியவர்கள் அடித்துக்கொலை.. வீட்டிற்கு தீ வைத்த கும்பல்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!