×
 

'நான் சாதாரண தொண்டன்… அவர்தான் பெரிய ஆளாச்சே…' அதிமுக நிர்வாகிக்கு செங்கோட்டையன் பதிலடி

இதையெல்லாம் கேட்க வேண்டிய கேள்வி பொதுச் செயலாளரிடம். என்னிடம் கேட்காதீர்கள் நான் ஒரு சாதாரண தொண்டன்

''அதிமுகவில் நான் சாதாரண தொண்டன்... அதையெல்லாம் பொதுச்செயலாளரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்'' என அதிமுக சீனியர் செங்கோட்டையன் சூசகமாக பதிலளித்துள்ளார்.

ஸ்ரீரங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், '' அந்தியூர் சட்டமன்றத் தொகுதியை பொறுத்தவரையிலும் தொடர்ந்து நாம் (அதிமுக) வெற்றி வாகை சூடினோம். சேவல்- புறா சின்னமிருக்கும் போதே நாம் வெற்றி வாகை சூடினோம். இந்த முறை அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் சில துரோகிகளால் தோல்வி ஏற்பட்டது. அதிலும், அந்தியூர் தொகுதிக்கு உட்பட்ட அத்தானியில் மிகப் பெரும் வாக்கு சரிவு ஏற்பட்டது. அதை தவிர நான் வேறு எதுவும் சொல்லவில்லை. அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் ஓப்பனாகவே அதிமுகவுக்கு எதிராக சிலர் வேலை செய்தார்கள்.

 அதிமுக-பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் நல்லது என்று ஓ.பி.எஸ். சொல்லி இருக்கிறாரே என்ற கேள்விக்கு செங்கோட்டையன் பதிலளிக்கையில், ''அதுகுறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். அவரிடம் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்க கூடாது'' என்றார்.  ராஜன் செல்லப்பா, ''ஆறு மாதம் பொறுத்து இருக்கவேண்டும். அப்போதுதான் ஓபிஎஸ்சை சேர்த்துக் கொள்ள முடியும்'' என சொல்லி இருக்கிறாரே என்ற கேள்விக்கு,''அது குறித்து அவர்கள் இருவரிடம் தான் கேட்க வேண்டும்'' என்று செங்கோட்டையன் பதில் அளித்தார்.

''இதையெல்லாம் குறித்து என்னிடம் கேட்டால் எப்படி? மூத்த தலைவர் எதுவாக இருந்தாலும் சொல்ல முடியாது. அரசியல் கட்சியில் மூத்த தலைவர், இளைய தலைவர் என்றெல்லாம் கிடையாது. அமைதியாக அவரவர் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தால் நல்லது'' எனப் பதிலளித்தார். 

இதையும் படிங்க: 'ஓ.பிஎஸிடம் வைத்துக் கொள்… என்னிடம் வேண்டாம்…' ஆர்.பி.உதயகுமாரை வெளுத்து வாங்கிய செங்கோட்டையன்..!

 உங்களுக்கும், எடப்பாடி சமூகமான சூழ்நிலை நிலவுகிறதா? என்ற கேள்விக்கு ''நீங்கள் கேள்வி மேல் கேள்வி கேட்கக்கூடாது. நான் கோவிலுக்கு செல்ல வேண்டியது இருக்கிறது. என்னை விடுங்கள்'' எனப் பதிலளித்தார். தேர்தல் ஆணையத்தில் அதிமுக விகாரம் குறித்து விசாரிக்க இருப்பதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு ''அதற்கெல்லாம் சி.வி.சண்முகம் தான் பதில் சொல்வார். அவர் தான் பெரிய லாயராச்சே. அவர்தான் எம்.பி. சட்ட குழு தலைவர். அவர்தான் சட்டமன்றத்தின் வழக்கறிஞர் பிரிவு செயலாளராக இருக்கிறார். அவர் தான் எம்பி ஆக இருக்கிறாரே. அவர் தான் எல்லாவற்றிற்கும் பதிலும் சொல்கிறார். அதை பொறுத்தவரையில் நாங்கள் யாருமே பதில் சொல்வதில்லை. அல்லது இதையெல்லாம் கேட்க வேண்டிய கேள்வி பொதுச் செயலாளரிடம். என்னிடம் கேட்காதீர்கள் நான் ஒரு சாதாரண தொண்டன்'' எனத் தெரிவித்தார்.

முன்பு முதல்வர் வேட்பாளர் பட்டியலில் நீங்களும் இருந்ததாக சொல்லப்பட்டதே? என்ற கேள்விக்கு, ''எவ்வளவு வருடம் ஆகிவிட்டது. மறுபடியும் அந்த கேள்வியை கேட்கிறீர்கள். எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது, மீண்டும் மீண்டும் அந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்? 

அவினாசி- அத்திக்கடவு விவசாயிகளின் பாராட்டு விழா குறித்து நான் சொன்ன ஒன்றே ஒன்றுதான். விவசாயிகள் பாராட்டு விழா நடத்தினார்கள். அதற்காக என்னை வந்து சந்தித்தார்கள். அவர்கள் என்னிடம் நோட்டீசை காட்டிய போது அம்மா, தலைவர் படம் இல்லையே என்கிற ஆதங்கத்தை சொன்னேன். அதற்கு எல்லாரும் நான் கூட்டத்தை புறக்கணிப்பதாக சொன்னார்கள். நான் புறக்கணிக்கவில்லை. கலந்து கொள்ளவில்லை என்றுதான் சொன்னேன். அவ்வளவுதான்'' எனப் பதிலளித்தார். 

அதிமுகவில் பழைய முக்கியமான தலைவர்களை ஒன்றிணைக்க கூடிய வாய்ப்பு இருக்கிறதா? அது போன்ற ஒரு திட்டத்தில் இருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு ''இப்படி பொசுக்கு பொசுக்கு என்று கேள்வி கேட்டால் நான் என்ன பதில் சொல்வேன். நான் அமைதியாக கோயிலுக்கு போவதற்காக வந்துள்ளேன். எப்போதும் ரங்கநாதர் கோவிலுக்கு இரண்டு மாதம் அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு தடவை வருவேன்''எனத் தெரிவித்து நகர்ந்தார்.

இதையும் படிங்க: பொதுச்செயலாளரிடம் தான் கேட்க வேண்டும்... புறக்கணிப்பட்டாரா செங்கோட்டையன்? - பரபரப்பு பிரஸ் மீட்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share