''திமுக கூட்டணியை உடைப்பதற்கு பலர் கூலி வாங்கிக்கொண்டு சதி வேலை செய்வதாக'' விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டை கிளப்பி உள்ளார்.
இதுகுறித்து அவர், ''கட்சி கட்டுப்பாடு என்பது மிக முக்கியமானது. வளர்ச்சி அடைய, வளர்ச்சி அடைய கட்சிக்குள்ளே, முன்னணி தலைவர்கள் இடையே, முதிர்ச்சி வெளிப்பட வேண்டும். கட்டுப்பாடுகள் பிறருக்கு முன் மாதிரியாக அமைய வேண்டும். ஆனால் முன்னணி பொறுப்பாளர்கள் சமூகவலைதளங்களில் கட்சிக்கும், தலைமைக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை பதிவிடுவது மிகுந்த வேதனையை தருகிறது.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் என்பார்களே, அப்படி பல்வேறு நெருக்கடிகளால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கும் நாம், கட்சி முன்னணி தோழர்களின் அணுகுமுறைகளாலும் காயப்பட வேண்டி இருக்கிறது. வேதனைப்பட வேண்டி இருக்கிறது என்பது தான் நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிற ஒன்றாகும்.
இதையும் படிங்க: பெரிய மன உளச்சலா இருக்கு... 'பானை'யை உடைச்சிடாதீங்க..! திருமா வேதனை
நமக்குள் எவ்வளவு முரண்பாடுகள் இருந்தாலும் அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ள கூடாது. பதிவு செய்ய கூடாது. கடந்த 10 ,15 ஆண்டுகளாக இதை நான் திரும்ப திரும்ப சொல்லி வருகிறேன். இயக்கத்தின் முன்னணி தோழர்கள் யுடியூப் போன்ற சேனல்களில், யாராவது பேட்டிக்கு அழைத்தால், அந்த சேனல் எத்தகைய பின்னணியை கொண்டது. அதை நடத்துகிறவர்கள் யார்?

என்ன நோக்கத்திற்காக அழைக்கிறார்கள் என்று கணக்கில் கொள்ளாமல், கருத்தில் கொள்ளாமல், ஏதோ ஒரு வாய்ப்பு தருகிறார்கள் என்கிற அடிப்படையில் பங்கேற்பது கவலைக்குரியது ஆகும். பேட்டிக்கு அழைத்தால் கட்சி தலைமையிடம் அனுமதி பெற வேண்டும் என்ற அணுகுமுறையை கொண்டிருக்க வேண்டும்.
பழனிசாமி அமித்ஷாவை சந்தித்தது அகில இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இப்போதே தேர்தலுக்கான சூடு பிடித்துவிட்டது. மனம் போன போக்கில் கருத்து சொல்வதை தவிர்க்க வேண்டும். கட்சியின் தலைவர்கள் என்ற முறையில் இதை சொல்ல வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. சட்டசபை தேர்தல் முடியும் வரை கட்சி நிர்வாகிகள் யாரும் யுடியூப் சேனலுக்கு பேட்டி கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

தேர்தல் வரையிலும் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும். திமுக கூட்டணியை உடைப்பதற்கு விசிகவில் இருக்கும் பலர் கூலி வாங்கிக்கொண்டு சதி வேலை செய்கிறார்கள். சிறுத்தைகளை தாண்டி திராவிடத்தை ஒழிக்க எவனாலும் முடியாது. திருமாவளவனை தாண்டி, விடுதலை சிறுத்தைகளை தாண்டி தமிழக அரசியலில் திராவிடத்தை ஒழிக்க ஒருவனாலும் கை வைக்க முடியாது. என்னை நம்புபவர்களை உயிரை கொடுத்து தாங்கி பிடிப்பேன்.

எடப்பாடியை தடுமாற வைப்பது விசிகவின் நிலைப்பாடு தான்.2வது இடத்தில் நீயா.. நானா..? என எடப்பாடிக்கும் விஜய்க்கும்தான் சண்டை. சனாதன சூழ்ச்சிகளை முறியடித்து சங்கிகளை விரட்டியக்கும் மகத்தான சக்தி விசிகவிடம் உள்ளது. சனாதன சக்திகளை வேரறுப்பதிலும் வீழ்த்துவதிலும் உறுதியாக இருப்போம்விசிக இருக்கும் வரை இன்னும் 100 மோடிகள் பிறந்து வந்தாலும் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது'' என அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சவுக்கு சங்கர் வீடு தாக்குதல் விவகாரம்.. திமுக மீது களங்கம் ஏற்படுத்த சதி.. திருமாவளவன் ஆதங்கம்!!