செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்துள்ள ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். வயது 45. விவசாயி கூலி தொழிலாளி. திருப்போரூரில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் தனது குழந்தைகளை அழைத்து வருவதற்காக ஆலத்தூர் பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் ஓ.எம்.ஆர் சாலையில் திருப்போரூர் நோக்கி சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து அதிவேகமாக கார் ஒன்று வந்துள்ளது. கல்லூரி மாணவி ஓட்டிவந்த அந்த கார் தண்டலம் அருகே சிறிய வளைவில் திரும்பும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி பறந்தது. அப்போது முன்னே சென்ற இருசக்கர வாகனம் மீதும் அதிவேகமாக மோதி அருகில் இருந்த மின் கம்பத்தை உடைத்துக் கொண்டு விவசாய நிலத்தில் விழுந்து கவிழ்ந்தது.

இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற சுரேஷ்குமார், 100 அடி தூரத்திற்கு அப்பால் தூக்கி வீசப்பட்ட நிலையில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த கல்லூரி மாணவியும், அவருடன் காரில் பயணித்த அவரது நண்பர்கள் 6 பேரும் பலத்த காயமடைந்தனர். இவர்கள் ஆறு பேரும் படூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் உணவுத் தொழில் நுட்ப பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வருவது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. கல்லூரி முடிந்ததும், மாமல்லபுரம் சென்ற மாணவர்கள் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு திரும்பியபோது தண்டலம் பகுதியில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது.
இதையும் படிங்க: தனியார் கெமிக்கல் குடோனில் பயங்கர தீ விபத்து... பள்ளிக்கும் பரவியதால் பெரும் பதற்றம்..!

இந்நிலையில் விபத்தில் ஆலத்தூர் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் இறந்தார் என்பது குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க வைத்தது. கிராம பொதுமக்கள் விபத்து நடைபெற்ற இடமான ஓ.எம்.ஆர். சாலையின் நடுவே சுரேஷ்குமாரின் சடலத்தை வைத்து சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
விபத்து ஏற்படுத்திய கல்லூரி மாணவிகள் போட்டி போட்டுக் கொண்டு அதி வேகமாக காரில் வந்ததால்தான் விபத்து ஏற்பட்டது என்றும், அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து பொதுமக்கள் கோஷமிட்டனர். இதையடுத்து திருப்போரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சுமூக பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த திருப்போரூர் போலீசார், மேலும் காயமடைந்த 6 மாணவர்களையும் கேளம்பாக்கத்தில் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அட்மிட் செய்தனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த திருப்போரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த 2 மாதத்திற்கு முன்பு பண்டிதமேடு கிராமத்தில் சாலை ஓரமாக அமர்ந்து மாடு மேய்த்துக் கொண்டிருந்த முதியவர்கள் மீது கல்லூரி மாணவர்கள் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். அதேபோல் இன்றும் ஓஎம்ஆர் சாலையில் அதிவேகமாக வந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியாவில் மோதி கார் விபத்துக்கு ஏற்பட்டதில் சாலையில் சென்ற ஒருவர் பரிதாபமாக இறந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: கேரளா கோயில் திருவிழாவில் கோர விபத்து.. 12 வயது சிறுவன் உட்பட 5 பேர் படுகாயம்..!