ஐசிசி டிராபி கிரிக்கெட் தொடரை நடத்தி போண்டியான பாகிஸ்தான்.. நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பு.!!
அண்மையில் நடைபெற்று முடிந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சமீபத்தில் பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஷிப் டிராபி நடைபெற்றது. 1996க்குப் பிறகு பாகிஸ்தானில் ஐசிசி தொடர் நடைபெற்றதால், இத்தொடர் மீது அதிக கவனத்தை பாகிஸ்தான் செலுத்தியது. இந்தொடரை நடத்துவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் லாகூர், கராச்சி, ராவல்பிண்டி ஆகிய 3 மைதானங்களைத் தேர்வு செய்தது. இந்த மைதானங்களின் சீரமைப்பு பணிக்காக சுமார் ரூ.504 கோடியை பாகிஸ்தான் செலவிட்டிருந்தது. இத்தொடருக்காக ஏற்கெனவே மதிப்பிட்ட தொகையைவிட 50 சதவீதம் அதிகரித்திருந்தது.
தொடர்ந்து போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளுக்கு என ஒட்டு மொத்தமாக ரூ.868 கோடியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முதலீடு செய்திருந்தது. ஆனால், இதுவரை பாகிஸ்தான் போட்டியில் பங்கேற்றதற்கு கட்டணமாக ரூ.52 கோடி மட்டுமே திரும்பி வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாடததால், லீக் போடிகள், அரையிறுதி, இறுதிப் போட்டி என 5 போட்டிகள் துபாயில் நடைபெற்றன. இதனால், பாகிஸ்தானுக்கு டிக்கெட் கட்டணம், இந்தியர்களின் பாகிஸ்தான் வருகையில் கிடைத்திருக்க வேண்டிய வருமானமும் கிடைக்காமல் போனது.
தவிர, டிக்கெட் விற்பனை, ஸ்பான்சர்கள் வாயிலாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு பெரிய அளவில் வருமானம் கிடைக்கவில்லை. ஒட்டுமொத்தமாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தியதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ரூ.738 கோடி நஷ்டம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், உள்ளூர் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கான ஊதியத்தை 90 சதவீதம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குறைத்துள்ளது. வீரர்கள் தங்குமிடம், பயணக்கட்டணம் ஆகியவற்றிலும் கெடுபிடிகளை காட்டி வருகிறது. முன்னர் 5 நட்சத்திர ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்ட வீரர்கள் தற்போது சாதாரண வசதி கொண்ட ஓட்டல்களில் தங்க வைக்கப்படுகின்றனர்.
இதையும் படிங்க: வெளிநாட்டு தொடர்களுக்கு மனைவி இல்லாமல் எப்படி போவது.? பிசிசிஐ மீது கடுப்பு காட்டும் விராட் கோலி.!!
இதையும் படிங்க: இந்தியா ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்றது நியாயமில்லையா.? குற்றம் சாட்டியவர்களை கும்மிய ஆஸ்திரேலிய ஜாம்பவான்.!