ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு..? ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடி கணிப்பு..!
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பு இருக்கிறது என்பது தொடர்பாக ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.
எட்டு அணிகள் பங்கேற்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வரும் 19-ஆம் தேதி முதல் மார்ச் 9ஆம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. கடைசியாக 2017ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்து கோப்பையை வென்றிருந்தது. இந்நிலையில் இத்தொடரில் கோப்பையை வெல்லும் அணி எது என்பது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் ஓய்வு பெற்ற ஆல்ரவுண்டர் அஸ்வின் தன்னுடைய யூடியூப் சேனலில் இது பற்றி பேசியிருக்கிறார்.
அதில், “இந்திய அணி துபாயில் விளையாடுவது இந்தியாவில் விளையாடுவது போன்று சாதகமான அம்சம். அதே நேரத்தில் துபாயில் இந்தியாவை எதிர்த்து ஆடும் மற்ற அணிகளுக்கு கிட்டதட்ட வெளிநாட்டு சீதோஷ்ண நிலையில் விளையாடுவது போல இருக்கும். இதுதான் மற்ற அணிகளுக்கு உள்ள பிரச்சினை. துபாயில் டாஸ் வெல்வது முக்கியம். கோப்பையை வெல்லும் வாய்ப்பில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் வலுவாக இருப்பதாக கருதுகிறேன். நியூசிலாந்து அணியில் டிம் சவுதி, டிரென்ட் இல்லாவிட்டாலும், அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் பிரேஸ்வெல், பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னெர் ஆகியோர் உள்ளனர். இந்திய அணிக்கு சவால் அளிக்கக்கூடிய அணிகளில் நியூசிலாந்தும் ஒன்று என்பதை மறுக்க முடியாது.
இதேபோல ஆஸ்திரேலியாவையும் ஒதுக்கிவிட முடியாது. ஸ்டீவன் சுமித் அந்த அணியை வழிநடத்த போகிறார். ஸ்மித், டிராவிஸ் ஹெட், மேக்ஸ்வெல், லபுஸ்சேன் ஆகியோர் நிச்சயம் அந்த அணியை அரையிறுதிக்கு அழைத்து செல்வார்கள். ஆஸ்திரேலிய அணி எப்போதும் சாம்பியன் அணி என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. பெரிய தொடர்களில் உயர்தரமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். ஆனாலும் ஆஸ்திரேலியாவிடம் இப்போது பந்து வீச்சில் சிக்கல்கள் உள்ளன. ஸ்மித்தின் பேட்டிங் பார்ம், கேப்டன்ஷிப்பை பொறுத்து அந்த அணியின் வெற்றி வாய்ப்பு அமையும்' என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி: எதிர்பார்த்த மாதிரியே இந்திய அணி அறிவிப்பு...
இதையும் படிங்க: அதான் நான் இருக்கேன்ல்ல.. இந்திய அணியில் இடம்பிடிக்க முட்டிமோதும் ஸ்ரேயாஸ் ஐயர்!