ஹனி ரோஸ் மலையாளத் திரைப்பட நடிகையாவார். இவர் சில தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தமிழில் ஜீவா இரு வேடங்களில் நடித்த 'சிங்கம்புலி' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார் மலையாளத்தில் நிறைய வாய்ப்புகள் வரவே மோகன்லால், மம்முட்டி ஆகியோருக்கு ஜோடியாக நடிக்கும் அளவிற்கு பிஸியான நடிகையாக மாறினார். இடையில் தெலுங்கில் நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாகவும் அம்மாவாகவும் கூட ஒரு படத்தில் நடித்தார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சுந்தர் சி ஜோடியாக 'பட்டாம்பூச்சி' படம் மூலம் மீண்டும் தமிழுக்கு திரும்பி வந்தார். சமீபத்தில் தான் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் துவங்கி புதிய படம் ஒன்றை தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில் தனது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டார் ஹனிரோஸ். சோசியல் மீடியாவில் என்னைப் பற்றி ட்ரோல் செய்து வரும் கமெண்ட்டுகளுக்கு நான் பதில் அளிப்பதில்லை. காரணம் அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்கிற பரிதாபம் தான். அதே சமயம் சமீபகாலமாக ஒரு நபர் தொடர்ந்து என்னை சோசியல் மீடியாக்களில் தரக்குறைவாக சித்தரிக்கும் வேலையை செய்து வருகிறார். இத்தனைக்கும் அவர் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்ட போதே என்னை அவர் ஏளனமாக விமர்சித்தார். அதன் பிறகு அவர் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வதை தவிர்த்து விட்டேன். இதனால் கோபமான அவர் தற்போது பொதுவெளியில் என் பெயரை தேவையில்லாமல் இழுத்து எனக்கு களங்கம் ஏற்படும் விதமாக நடந்து கொள்கிறார் என்று குற்றம்சாட்டினார்
ஆரம்பத்தில் நான் அமைதியாக இருந்தாலும் என்னை சுற்றி இருக்கும் எனது நலம் விரும்பிகள், இப்படி ஒருவர் உன்னைப்பற்றி அவதூறாக பேசிக் கொண்டிருக்கிறார்.. இதற்கு ஏன் பதில் சொல்லவில்லை ? ஒருவேளை இது போன்ற கமெண்ட்களை நீ ரசிக்கிறாயா என்று கேட்கத் துவங்கி விட்டனர். நிச்சயமாக இல்லை.. சம்பந்தப்பட்ட அந்த நபர் மீது நான் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப் போகிறேன். வசதி படைத்தவர், செல்வாக்கு மிக்கவர் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா ? அவர் பெயர் என்ன என்பதை நான் குறிப்பிட விரும்பவில்லை” என்று ஒரு எச்சரிக்கை வெளியிட்டார் ஹனி ரோஸ்.
ஹனி ரோஸ் பதிவால் மலையாள திரையுலகே பற்றி எறிந்த நிலையில் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர் . நடிகை ஹனிரோஸின் சமூக வலைதளப் பதிவில் தரக்குறைவாக கமெண்ட்டு செய்த 30 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஐடி சட்டப்பிரிவு 75,76இன் படி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கொச்சி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நடிகர் விஷாலுக்கு என்ன ஆனது? வீங்கிய முகம், நடுங்கிய கைகள், உதறிய குரல்.. பதறும் ரசிகர்கள்..