நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், " 'இண்டியா'' கூட்டணி வலுவிழந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியில் கூட்டணியைத் தலைமையேற்று நடத்த திறமையான தலைவர்கள் இல்லை. அதிலுள்ள ஒவ்வொரு கட்சி யும் கழன்று கொண்டே வருகிறது. இதே நிலை நீடித்தால் இண்டியா கூட்டணியில் திமுகவும், காங்கிரசும்தான் மிஞ்சும். அதனால்தான் இண்டியா கூட்டணியைச் சிதற விடக் கூடாது என திமுக நினைக்கிறது.

அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வர உள்ளது. எனவே, தொகுதி மறுவரையறை குறித்து திமுக பேசுகிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மக்களுக்கு என்ன செய்தோம் என்று கூற திமுகவுக்கு எதுவும் இல்லை. சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு அடைந்துள்ளது. மேற்கு வங்கத்தில் பெண் டாக்டர் கொலை செய்யப்பட்டது குறித்து நாடு முழுவதும் பேசப்பட்டது. ஆனால், அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தை மறைத்து விட்டனர். நாங்கள் தலித் மக்களுக்காக உழைக்கும் கட்சி எனக் கூறும் திமுக, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய இறப்பு சம்பவத்தை கண்டுகொள்ளவில்லை.
போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட திமுகவைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் இணைந்து முதல்வரின் குடும்ப உறுப்பினர் திரைப்படம் தயாரித்துள்ளார். இவையெல்லாம் 2026 சட்டபேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதை மறைக்கத்தான் தமிழ் பற்று, ஹிந்தியை திணிக்கின்றனர் என மீண்டும் மொழி பிரச்சினையைத் தொடங்கியுள்ளனர். நான் பள்ளி படிக்கும் காலத்திலிருந்தே இந்தப் பொய் பிரசாரத்தை கேட்டு வருகிறேன்.
இதையும் படிங்க: தொகுதி மறுவரையறை விவகாரம்.. கோடு போட்ட ஸ்டாலின்.. ரோடு போடும் ரேவந்த் ரெட்டி..!!

டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. இதை மறைத்து தேர்தலைச் சந்திக்க, தொகுதி மறுவரையறையைப் பூதாகாரமாக்குகின்றனர். 'எந்த ஒரு மாநிலத்திற்கும் அநியாயம் நடக்காது' என கடந்த ஆண்டே பிரதமர் கூறி விட்டார். தொகுதி மறுவரையறை நடக்க வேண்டும் என்றால், முதலில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்; அதன்பின், தொகுதி மறுவரையறை ஆணையம் அமைக்க வேண்டும். அந்த ஆணையம் ஒவ்வொரு மாநிலமாக சென்று கருத்து கேட்கும்.
அதன் அடிப்படையில்தான் முடிவு மேற்கொள்ளப்படும். இதற்கு ஓராண்டுக்கு மேல் கூட ஆகலாம். ஒவ்வொரு மாநிலமும், தங்கள் கருத்தை தெரிவிக்கும். திமுக தேவை இல்லாமல் இப்பிரச்சினையை முன்னெடுப்பதாக கூறிக் கொள்கிறது.
மக்கள்தொகை அடிப்படையில், ஏற்கனவே லோக்சபா தொகுதிகள் நிர்ணயிக்கப்பட்டபோது, லடாக், லட்சத்தீவு போன்றவற்றுக்கு, மக்கள்தொகையை மட்டும் கணக்கில் கொள்ளவில்லை. அங்கெல்லாம் தலா ஒரு தொகுதி வழங்கப்பட்டது. தொகுதி மறுவரையறை என்பது, மக்கள்தொகை அடிப்படையில் மட்டும் மேற்கொள்ளப்படுவதில்லை. கடந்த மக்களவைத் தேர்தலின்போது, மக்கள்தொகை அடிப்படையில், அவர்களுக்கான பங்கு கிடைக்க வேண்டும் எனக் கூறியவர் ராகுல். இன்று அவருடைய கட்சியினர் திமுக கூட்டிய கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். திமுக ஒரு பொய்யைக் கூறி விட்டு, அடுத்தடுத்து பொய் பிரச்சாரங்களை செய்கிறது.

'நாங்கள் நிறைய கொடுக்கிறோம்; எங்களுக்கு அதிகம் வேண்டும்' என்கின்றனர். அதேபோல் தமிழகத்தில் அவர்களால் செயல்படுத்த முடியுமா? கோவை, சென்னைக்கு செலவழிக்கும் அளவுக்கு அரியலுார், கோவில்பட்டியில் செலவழிக்கிறார்களா? மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துகிறது. அதை கணக்கில் கொள்ளாமல், மத்திய அரசு தங்களுக்கு பண மூட்டையாக கொடுக்க வேண்டும் என்கின்றனர். உங்களுக்கு நிதி வேண்டும் என்றால், நிதிக்குழுவிடம் சென்று கேட்க வேண்டும். தமிழகத்தில் நடைபெறும் ஊழல் குறித்து நடவடிக்கை எடுத்தால் அரசியல் ரீதியாக நடவடிக்கை எடுப்பதாகக் கூறி மக்களைக் குழப்புகின்றனர்.
பி.எம்.ஸ்ரீ. திட்டத்தில் கையெழுத்திட முதலில் தமிழக அரசு ஒப்புக் கொண்டது; பின்னர்தான் மறுத்து விட்டது. இத்திட்டத்தில் தமிழகம் மட்டுமே கையெழுத்திடாமல் உள்ளது.
தொகுதி மறுவரையறை கூட்டத்தில் கலந்து கொண்ட கேரளா, தெலங்கானா போன்ற மாநிலங்களும் கையெழுத்திட்டுள்ளன. திமுகவினர் யாரும் புதிய தேசிய கல்விக் கொள்கையை முழுமையாகப் படித்துப் பார்க்கவில்லை. ஏனெனில், இந்தி படித்தாக வேண்டும் என எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. அப்படி ஒரு வரி இருந்தால்கூட நான் மன்னிப்பு கேட்கிறேன்." என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: காலையிலேயே கையில் கருப்புக்கொடியுடன் வந்த தமிழிசை... 3 மாநில முதல்வர்கள் முன்னாடி மு.க.ஸ்டாலினுக்கு நேர்ந்த அவமானம்...!