இதற்கான உத்தரவை பிறப்பித்த நீதிபதி, மாவீரன் அலெக்சாண்டர் இறுதி காலத்தில் கல்லறைக்குச் சென்றபோது வெறும் கையுடன் தான் சென்றார் என்பதை நினைவூட்டினார். "இறந்த பிறகு நம்மால் எதையும் எடுத்துச் செல்ல முடியாது" என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையின்போது அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட தங்க, வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள் கர்நாடக அரசின் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நகைகளை கர்நாடக மாநிலம், தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என கடந்த ஆண்டு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கின் விசாரணையின்போது ஜெ.தீபா தரப்பில், தான் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வமான வாரிசு என வாதிடப்பட்டது. இதற்கு கர்நாடக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: இன்னுமா ஓயவில்லை இரட்டை இலை பிரச்னை.. ஏங்கி நிற்கும் ஓபிஎஸ்..
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஷானந்தா தீர்ப்பு வழங்கினார்.
அப்போது, “சட்டப்பூர்வ வாரிசாக இருப்பதாலேயே ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோருக்கு இந்த நகைகளை வழங்க முடியாது. இவ்வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் சொத்துகள் அனைத்தையும் பறிமுதல் செய்து அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளன” எனக்கூறி, அவர்களின் மனுவை தள்ளுபடி செய்தார்..

இருப்பதை ஏழைகளுக்கு கொடுத்து உதவுங்கள்..
விசாரணை முடிந்ததும் ஜெயலலிதாவின் பெயரில் அறக்கட்டளை தொடங்குவது குறித்து சட்டபூர்வ வாரிசுகளுக்கு நீதிமன்றம் வாய்மொழியாக பரிந்துரைத்தது. "அலெக்சாண்டர் வெறும் கையுடன் தான் சென்றார் கல்லறைக்கு. வெளியே ஒரு கையால் இங்கிருந்து எதையும் எடுத்துச் செல்ல முடியாது நிச்சயமாக நீங்கள் ஒன்றை எடுத்துச் செல்லலாம். இந்த சமுதாயத்தில் ஏராளமான ஏழைகள் உள்ளனர். ஜெயலலிதா பெயரில் அறக்கட்டளை அமைத்து இப்படிப்பட்ட ஏழைகளுக்கு சேவை செய்யுங்கள். உங்களுக்கு மன நிறைவு மட்டுமல்ல பிரிந்து சென்ற அவருடைய ஆன்மாவும் நிச்சயமாக சாந்தி அடையும். உங்களுக்கு வந்திருப்பது கடவுளின் பரிசு. அது கிடைத்ததில் திருப்தி கொள்ளுங்கள். நிறைய எதிர்மறையான விஷயங்கள் இருக்கும். அநாகரீகமாக சம்பாதிப்பதில் ஒருவர் செழிக்க மாட்டார்" என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

மேல் முறையீடுதாரர்கள் சார்பில் வழக்குரைஞர்கள் டாக்டர் எம் சத்திய குமார் உதய் மற்றும் எஸ் சதீஷ்குமார் ஆகியோர் வாதாடினர்.
இதையும் படிங்க: ‘நெஞ்சம் பதறுகிறது..’ஈரோடு இடைத்தேர்தலை புறக்கணித்த அதிமுக- தேமுதிக... திறனற்ற நிலையில் எதிர்கட்சிகள்..?