கூட்டங்களுக்கு அனுமதி மறுத்து கைது செய்த நடவடிக்கைகளுக்கு எதிராக பாமக தொடர்ந்த வழக்கில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாகுபாடு காட்டாமல் அனைத்து தரப்பினரையும் காவல்துறையினர் சமமாக பாவிக்க வேண்டும் என காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் மாணவிக்கு நீதி கேட்டு எதிர்க்கட்சிகள், திமுகவின் தோழமைக்கட்சிகள் போராட்டம் நடத்தின. போராட்டம் நடத்திய எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்த முறைப்படி அனுமதிக்கப்பட்ட இடங்களில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டனர். ஆனால் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்து போராட்டம் நடத்த விடாமல் வலுக்கட்டாயமாக கைதும் செய்தது காவல்துறை.
ஆனால் ஆளுநரை எதிர்த்து திமுக நடத்திய போராட்டத்தில் உடனடியாக அனுமதியும், வழக்கு பதிவு செய்துவிட்டோம் என காவல்துறை சொன்னாலும் இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் குறித்து பாமக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிமன்றம் காவல்துறை கடைபிடிக்க வேண்டியது குறித்து அறிவுரைகளை கூறியுள்ளது. காவல்துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். வழக்கில் தீர்ப்பு ஜன 27 வரும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 40 ஆயிரம் கோடி வருவாய் இருந்தும் ரூ.4435 கோடி நஷ்டம் எப்படி ..மின்வாரியம் மீது சந்தேகம் கிளப்பும் அன்புமணி!

நீதிமன்ற வழக்கு விபரம் வருமாறு...
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்த போது ஐந்து நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறி அனுமதி மறுத்த காவல்துறை, ஆளுநருக்கு எதிராக ஆளுங்கட்சியினர் போராட்டம் நடத்த அனுமதித்துள்ளதாக குற்றம் சாட்டி பாமக கொள்கை பரப்புச் செயலாளர் சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், “போராட்டம் நடத்த ஐந்து நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறி எதிர்க்கட்சியினருக்கு அனுமதி வழங்க மறுக்கும் காவல்துறையினர், எந்த கட்டுப்பாடும் இல்லாமல், விண்ணப்பம் பெறாமலே ஆளுங்கட்சியினர் போராட்டத்தை அனுமதித்துள்ளனர்” என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
”போராட்டங்களுக்கு ஐந்து நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் என்ற சென்னை நகர போலீஸ் சட்ட விதியை மீறி செயல்பட்ட சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, உள்துறைச் செயலாளருக்கும் டிஜிபிக்கும் உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது, காவல்துறை தரப்பில் “விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ”ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாகுபாடு காட்டாமல் அனைத்து தரப்பினரையும் காவல்துறையினர் சமமாக பாவிக்க வேண்டும். ஒரே மாதிரியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” என்று நீதிபதி அறிவுறுத்தினார்.
”ஒரு தரப்புக்கு ஒரு நாளில் அனுமதி அளிப்பதும், மற்றவர்களின் கோரிக்கையை பரிசளிக்காமல் இருப்பதும் கூடாது, போராட்டங்களுக்கு அனுமதி கோரிய விண்ணப்பங்கள் மீது குறித்த காலத்தில் முடிவெடுக்க வேண்டும், போராட்டத்தில் கலந்து கொள்பவர்களின் மன நிலை எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ள முடியாது, ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு காவல்துறையினால் தான் பதில் சொல்ல வேண்டி வரும். அவர்களை தான் குறை கூறுவார்கள்” என்றும் நீதிபதி தெரிவித்தார்.
பின்னர், பாமக மனுவுக்கு ஜனவரி 22 ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 23 ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, இது தொடர்பாக விரிவான உத்தரவுகள் பிறப்பிப்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: தரம் உயர்த்தப்பட்டும் "நோ யூஸ்"..அரசு மருத்துவமனையில் பாமகவினர் ஆர்ப்பாட்டம்