தூய்மை பணியாளர்கள் மறுவாழ்வு முன்னேற்றத்திற்கு கொண்டு வரப்பட்ட திட்டம், செல்வப் பெருந்தகையின் பினாமி நிறுவனத்திற்கு வாகனங்கள் வாங்க பயன்படுத்தப்பட்டுள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். இதற்கு திமுக அரசும் உடந்தையா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தூய்மை பணியாளர்களைத் தொழில்முனைவோர்களாக மாற்றுவதாக அறிவித்து, அவர்கள், சென்னை குடிநீர் வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குனரகம், மூலமாக, அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்து மேற்கொள்ள, 524 கோடி ரூபாய் மதிப்பில், அடுத்த 7 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருப்பதாக திமுக அரசு அறிவித்திருந்தது.

நவீன கழிவுநீர் அகற்றும் வாகனம் வாங்க, சென்னை மத்திய கூட்டுறவு வங்கியில் 33 பயனாளிகளுக்கும், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் 54 பேருக்கு 65 லட்சம் வீதம் கடன் வழங்கப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம் வங்கியில் கடன் வழங்கி 7 மாதங்கள் ஆகியும் கடன் தொகையில் ஒரு ரூபாய் கூட திருப்பி செலுத்தப்படவில்லை. எந்தவித பிணையும் இல்லாமல், இத்தனை பேருக்குத் தலா 65 லட்சம் எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: மாணிக்கம் தாகூருடன் பனிப்போரா? - சிரித்துக்கொண்டே செல்வப்பெருந்தகை கொடுத்த பதில்...!

உண்மையில் கடன் பெற்றவர்கள் தூய்மை பணியாளர்கள்தானா? என்ற சந்தேகம் இருக்கிறது. சென்னையை சேர்ந்த Gengreen Logistics & Management என்ற நிறுவனத்துக்கும், வங்கி கடன் பெற்ற பயனாளிகளுக்கும் இடையே, கடந்த 2023ம் ஆண்டே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. தமிழக அரசோடு தூய்மை பணியாளர்கள் மேற்கொண்டுள்ள 524 கோடி மதிப்பிலான கழிவுநீர் அகற்றும் ஒப்பந்த பணிகளை, தொழிலாளர்களுக்கு பதிலாக அந்த நிறுவனமே மேற்கொள்ளும் என கூறப்பட்டு உள்ளது.

ஜென்கிரீன் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான வீரமணி ராமகிருஷ்ணன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் சொந்த அண்ணன் மகன். செல்வப்பெருந்தகையின் அலுவலக முகவரிதான். அந்த நிறுவனத்தின் பதிவு அலுவலக முகவரி. தூய்மை பணியாளர்கள் மறுவாழ்வு முன்னேற்றத்திற்கு கொண்டு வரப்பட்ட திட்டம், செல்வப் பெருந்தகையின் பினாமி நிறுவனத்திற்கு வாகனங்கள் வாங்க பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது, திமுக அரசுக்குத் தெரியாமலா நடந்திருக்கும்?

ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடித்து, அவர்களுக்கான திட்டங்களை தங்கள் நலனுக்காக மடைமாற்றியிருப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? ஒரு மாபெரும் ஊழலை அரங்கேற்றி இருக்கிறார் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை. இதற்கு திமுக அரசும் உடந்தையா? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
இதையும் படிங்க: அண்ணாமலைக்கு போன் போட்ட அமித் ஷா... டெல்லி வரச் சொன்ன காரணம் இதுவா?