தெலங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டம் ராமேஸ்வர பள்ளியைச் சேர்ந்தவர் பால் சந்திரம். இவருக்கு வயது வயது 55. காம ரெட்டியில் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் கனக மகா லட்சுமிக்கும் பெங்களூரைச் சேர்ந்த ராகவேந்திரா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஜங்கம்பள்ளி புறநகர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் பிரம்மாண்டமான முறையில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நேற்று முன் தினம் இரவு நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருமண வரவேற்பு விருந்து, பாட்டுக் கச்சேரி, ஆடல், பாடல் என திருமண மண்டபமே மகிழ்ச்சி வெள்ளத்தில் இருந்தது.
வரவேற்பு நிகழ்ச்சிகள் முடிந்த நிலையில், நேற்று காலை திருமணம் நடைபெறுவதாக இருந்தது. தாலி கட்டும் முன்பாகக் கன்னிகாதானம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பால் சந்திரம் தனது மகளின் கையைப் பிடித்து மணமகனிடம் ஒப்படைத்தார். அப்போது யாரும் எதிர்பாராத நிலையில் பால் சந்திரம் மயங்கி சரிந்து விழுந்தார். இதைக் கண்டு மண்டபத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பால் சந்திரத்தை உடனே சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் பால் சந்திரம் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அவருடைய மரணத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டது காரணம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தத் தகவல் திருமண மண்டபத்தில் உள்ள உறவினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மணமகளின் திருமணம் நின்றது. திருமணத்துக்காக உற்சாக மகிழ்ச்சியில் இருந்த திருமண மண்டபம், மணமகளின் தந்தையின் திடீர் மரணத்தால் சோகத்தில் மூழ்கி, வெறிச்சோடியது.
இதையும் படிங்க: தெலங்கானா சுரங்க விபத்து: மேலே தெரிந்த ஊழியரின் கை..! சிக்கிய 8 பேரும் பலியா? மீட்பு பணியில் ராணுவம்..!
இதையும் படிங்க: தெலுங்கானாவில் கோர விபத்து... இடிந்து விழுந்த சுரங்கப்பாதை...! சிக்கிய தொழிலாளர்களின் கதி என்ன?