சென்னை வந்திருந்த மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, கே.பி. முனுசாமி உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்துப் பேசினார்கள். இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த அமித் ஷா, "பாஜக மற்றும் அதிமுக தலைவர்கள் இணைந்து கூட்டணியை உருவாக்கி இருக்கிறார்கள். அதிமுக -பாஜக மற்றும் பிற கட்சிகள் இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி 2026 சட்டப்பேரவைத் தேர்தலை தமிழகத்தில் எதிர்கொள்ளும்.
இந்தக் கூட்டணி, தேசிய அளவில் மோடி தலைமையிலும், தமிழக அளவில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் செயல்படும்." என்று அமித் ஷா அறிவித்தார்.

அதிமுக - பாஜக கூட்டணி உருவான சிறிது நேரத்தில் மகிழ்ச்சி தெரிவித்து பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டார். அதில்,"தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு வலிமையாக ஒன்றுபடுவோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் இணைந்து வளர்ச்சிப் பாதையில் தமிழகத்தை கொண்டு செல்வோம். மாநிலத்துக்கு விடா முயற்சியுடன் சேவை செய்வோம்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றும் ஒரு அரசை நாங்கள் உறுதி செய்வோம். தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகவும், தமிழ் கலாசாரத்தின் தனித்துவத்தை பாதுகாக்கவும் ஊழல் திமுகவை விரைவில் வேரோடு அகற்றுவது முக்கியம். அதை தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதி செய்யும்." என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பத்திரிகையாளர்களுக்கு பதிலளித்த அமித்ஷா... மைக்கை பிடிங்கி பேசிய அண்ணாமலை... என்ன சொன்னார் தெரியுமா?
இதையும் படிங்க: திமுகவை வீழ்த்த அமித் ஷா கையிலெடுக்கப்போகும் அஸ்திரம்... கூட்டணி உறுதியானவுடன் போட்ட சபதம்..!