விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தாயில்பட்டி கலைஞர் காலனி பகுதியை சேர்ந்தவர் பொண்ணுச்சாமி ( வயது 40). இவரது மனைவி முனீஸ்வரி ( வயது 35 ). இவர்கள் இருவரும் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் பட்டாசு ஆலையில் கூலி தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு 8 வயது, 6 வயது, 4 வயதுகளில் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையில் பிடிப்பு இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து குல தெய்வ கோயிலுக்கு சென்றுவிட்டு வந்தால் நிலைமை சரியாகும் என இருவரும் முடிவு செய்து கோயிலுக்கு சென்றுள்ளனர். நேற்று கோவிலுக்குச் சென்று நடு இரவில் வீடு திரும்பி உள்ளனர். அப்போது மீண்டும் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்னை காரணமாக சண்டை ஏற்பட்டதாக கூறப்பட்டுகிறது. கோயிலுக்கு சென்று திரும்பும் போதும் பொண்ணுச்சாமி குடித்ததாகவும், அதை முனீஸ்வரி தட்டிக்கேட்டதாகவும் அதனால் இருவருக்கும் இடையில் சண்டை வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சொல்பேச்சை கேட்காத மனைவி... துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த கணவன்!!

இந்நிலையில் குடிபோதையில் இருந்த பொண்ணுச்சாமி அவரது மனைவி முனீஸ்வரியை அருகில் கிடந்த சிறு உரல் கல்லைக் கொண்டு பலமாக அடித்துள்ளார். இதில் முனீஸ்வரி தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ரத்த வெள்ளத்தில் சரிந்த முனீஸ்வரி சம்பவ இடத்திலேயே இறந்தார். முனீஸ்வரியின் உடலை என்ன செய்வதற்கு யோசித்த பொண்ணுச்சாமி, உடலை எரித்து சாம்பலாக்கி தப்பி விடலாம் என திட்டமிட்டுள்ளார். உடனே தனது மோட்டார் சைக்கிள்களில் இருந்து பெட்ரோலை எடுத்து முனீஸ்வரி மீது ஊற்றி தீ வைத்துள்ளார். சிறு வீடு என்பதால் முனீஸ்வரி மீதுபற்றிய தீ பொன்னுச்சாமி மீதும் பரவியது.

இதில் பொண்ணுசாமிக்கு முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இச்சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை காவல் ஆய்வாளர் சங்கர், துணை காவல் ஆய்வாளர் செண்பகவேலன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தி உள்ளனர். முனீஸ்வரியின் உடலை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை சம்பந்தமாக வழக்கு பதிவு செய்த வெம்பக்கோட்டை போலீசார் கணவர் பொன்னுச்சாமி கைது செய்தனர். எனினும் பொண்ணுச்சாமி உடலிலும் தீக்காயங்கள் இருந்ததால் அவரை சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். காதலித்து திருமணம் செய்த பெண்ணை அடித்தே கொலை செய்தது மட்டும் அல்லாமல், கொலையில் இருந்து தப்பிக்க மனைவி உடலை கணவனே பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது
இதையும் படிங்க: கோவையில் பூட்டிய வீட்டிற்குள் நடந்த பயங்கரம்... எங்கு பார்த்தாலும் ரத்தம்... அதிர்ச்சியில் உறைந்த போலீசார்...!