திருச்சி மாவட்டம் அரியமங்கலம் அம்மாகுளம் பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 64). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 10ம் தேதி காட்டூர் கைலாஷ் நகர் பகுதியில் உள்ள தெரிந்தவர் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு பொன்ராஜ் சென்றுள்ளார். ஆனால் பாதி வழியில் காட்டூர் கைலாஷ் நகர் பகுதியில் பொன்ராஜ் இருசக்கர வாகனத்துடன் உடலில் காயத்துடன் விழுந்து கிடந்துள்ளார். அவரை அப்பகுதி மக்கள் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் பொன்ராஜுக்கு ஏற்பட்ட காயங்களை பார்த்தபோது அது விபத்து போல் இல்லாமல் இருப்பதாகவும், வேறு யாரேனும் கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசாருக்கும் பொன்ராஜின் மகன் சுந்தர்ராஜுக்கும் சந்தேகம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தனது தந்தை இறப்பில் மர்மம் இருப்பதாக போலீசில் சுந்தர்ராஜ் தெரிவித்தார். இதையடுத்து பொன்ராஜன் உடல் மீட்கப்பட்ட இடத்திலும் , அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் சோதனை செய்தனர்.
இதையும் படிங்க: ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை.. தொழில் போட்டி காரணமா..? போலீசார் விசாரணை..!

அதில் சில இளைஞர்கள் அவ்வழியாக கடந்து செல்வது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து சந்தேகப்படும்படியான நபர்களைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை என உறுதி செய்யப்பட்ட நிலையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பொன்ராஜின் மருமகளுடன் அரியமங்கலம் முத்துநகரை சேர்ந்த நிஷாந்த் (வயது 27) என்பவனுக்கும் இடையே பழக்கம் இருந்து வந்தது. அதனை பொன்ராஜ் கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் பொன்ராஜை நிஷாந்த் மற்றும் அவனது கூட்டாளிகள் தாக்கி கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். உடனே நிசாந்தையும் அவனது கூட்டாளிகளான திருநெடுங்களம் வடக்கு தெரு சேர்ந்த பாரதிராஜா (வயது 24), அரியமங்கலம் அம்மா குளத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 19) சிலரையும் பிடித்து விசாரணை செய்தனர். இதனிடையே திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு சம்பந்தமாக ஸ்ரீரங்கம் அடைய வளைஞ்சான் வீதியைச் சேர்ந்த பிரசன்னா (வயது 20), ஸ்ரீரங்கம் வடக்கு வாசலை சேர்ந்த குணசேகர் (வயது 21) ஆகிய இரண்டு பேரும் சரணடைந்தனர்.

இதனால் பொன்ராஜ் இறப்பு கொலை தான் என்பது உறுதியாகியது. மேலும் நிஷாந்திடம் எதற்காக பொன்ராஜை கூட்டாளிகளுடன் சேர்ந்து ஏன் தாக்கினீர்கள் என போலீசார் விசாரித்துள்ளனர். பொன்ராஜ் மருமகளுடன் தனக்கு இருந்த தொடர்பை தெரிந்து கொண்டு பொன்ராஜ், தன்னை கண்டித்ததோடு தன்னை பார்க்கும் போதெல்லாம் திட்டி வந்ததாக நிஷாந்த் தெரிவித்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்து தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பொன்ராஜை தாக்கி விட்டு சென்றதாகவும் இந்த நிலையில் தான் பொன்ராஜ் இறந்து விட்டார் எனவும் வாக்குமூலம் கொடுத்துள்ளான்.

அதன் அடிப்படையில் நிஷாந்த், பாரதிராஜா, சந்தோஷ், பிரசன்னா, குணசேகர் ஆகிய ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தொடர்புடைய வீரமணி உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட முன்விரோதத்தால் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் தற்பொழுது கொலை கொலை செய்யப்பட்டாரா? அல்லது தொழில் போட்டி, கொடுக்கல் வாங்கல் காரணமாகவோ நிசாந்தை கூலிப்படையாக ஏவி விட்டு கொலை செய்யப்பட்டரா என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஏமாற்றி நிலம் அபகரிப்பு...தாய் மாமனை வெட்டிக்கொன்ற மருமகன்