துப்புரவு தொழிலாளிகள் என்று கூறிக் கொண்டு 50 பேர் கொண்ட கும்பல் தன் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இன்று காலை 9.30 மணி முதல், துப்புறவு தொழிலாளிகள் என்று கூறிக் கொண்டு 50 பேர் கொண்ட கும்பல் தன் வீட்டின் மீது சராமரியாக தாக்குதல் நடத்தியதாகவும், படுக்கையறை, சமையலறை, சமையல் பொருட்கள் என அத்தனை பொருட்களின் மீதும் சாக்கடையையும் மலத்தையும் கொட்டியதாகவும் வீடியோ காலில் வந்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சவுக்கு சங்கர் வீட்டை சூறையாடிய கும்பல்.. வீடியோ காலில் கொலை மிரட்டல்..!

யாருடைய தூண்டுதலில் இந்தத் தாக்குதல் நடைபெறுகிறது என்பதை சொல்ல வேண்டியதில்லை என்று கூறியுள்ள அவர், தாக்குதல் நடத்தியவர்கள் போனை பிடுங்கி வீடியோ காலில் பேசியபோது பதிவு செய்த காட்சிகளையும் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், சவுக்கு சங்கர் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கண்டித்துள்ளார்.

திமுக ஆட்சியின் ஊழலையும், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியாத கையாலாகாத்தனத்தையும் குறித்துப் பேசுபவர்கள் மீது, வழக்கு தொடர்வது, நள்ளிரவில் காவல்துறையினரை அனுப்பி மிரட்டுவது, குண்டாஸ் வழக்கில் கைது செய்வதென தொடர்ந்து அராஜகப் போக்கில் ஈடுபட்டு வருகிறது திமுக அரசு என குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக அரசு ஊழல் செய்திருக்கிறது என்பதைக் கூறியதற்காக, சவுக்கு சங்கர் மீது நடத்தப்படும் இந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டிக்கிறோம் என்றும் ஒருவர் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து, சுமார் மூன்று மணி நேரம் கடந்தும், காவல்துறை இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், யாருடைய தூண்டுதலின் பெயரில் இது நடக்கிறது என்பதை உணர முடிகிறது எனவும் கூறினார்.
ஆட்சியாளர்களின் இந்த அராஜகப் போக்கு தொடர்வது நல்லதல்ல. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கொஞ்ச நஞ்சா பேச்சா பேசுனீங்க... அண்ணாமலை, எச்.ராஜாவுக்கு குடைச்சல் கொடுக்கும் தமிழக அரசு...!