இன்று தமிழகம் முழுவதும் பெண்களின் பாதுகாப்பை உறுதி படுத்திட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கையெழுத்து இயக்கமும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. மகளிர் தினத்தை முன்னிட்டு சேலம், கோவை, தஞ்சாவூர், நாகை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்குவதற்கு பதிலாக டாஸ்மாக் கடைகளை இழுத்து மூட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அப்படி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தினரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். போராட்டத்திற்கு அனுமதி பெறவில்லை எனக்கூறி தமிழக வெற்றிக் கழகத்தினரை போலீசார் கலைந்து செல்ல வலியுறுத்தியதால் சில இடங்களில் வாக்குவாதமும், தள்ளு முள்ளும் ஏற்பட்டது.

இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்தினரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்ததை அக்கட்சியின் தலைவர் விஜய் கடுமையாக கண்டித்துள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் தள பக்கத்தில், தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாமலும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியும் வரும் நிலையில், அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகிறது. பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, உலக மகளிர் தினமான இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கழக மகளிர் அணியினர் மற்றும் தோழர்கள் அறவழியில் அடையாளப் போராட்டத்தை நடத்தினர்.

இதையும் படிங்க: இஸ்லாமியர்களின் ஓட்டில்.. ஓட்டையை போட்ட விஜய்..! மெர்சலாகும் திமுக..!
தங்களுக்கான உரிமை கிடைக்காத பட்சத்தில் அதை வலியுறுத்திக் கேட்டுப் பெற வேண்டிய நிலையில் தமிழ்நாட்டுப் பெண்கள் இருப்பதால்தான் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக இந்த அறவழி அடையாளப் போராட்டமானது நடைபெற்றது. ஆனால் தமிழக மக்கள் தங்களின் தேவைகளுக்காகக் கூட போராட்டத்தை நடத்தக் கூடாது என்ற அராஜகப் போக்குடன் தமிழக அரசு, கழக மகளிர் மற்றும் தோழர்களைக் கைது செய்திருக்கிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழ்நாடு முழுவதும் கைது செய்யப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத் தோழர்களையும் மகளிரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனத் தமிழ்நாட்டு அரசை வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஊடக விளம்பரத்துக்கு தான் விஜய் திமுகவை குறை சொல்றாரு... கே.என்.நேரு பதிலடி..!