உடல் உறுப்புகளை தானம் செய்யும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் தேசிய உறுப்பு மற்றும் திசுக்கள் மாற்று அமைப்பின் (நோட்டோ) தலைவர் டாக்டர் அனில் குமார் கூறுகையில், "உடல் உறுப்புகளை தானம் வழங்கும் மத்திய அரசு ஊழியர்கள் 42 நாள் சிறப்பு தற்செயல் விடுப்பு (சிஎல்) எடுத்துக் கொள்ளலாம். இது தொடர்பாக மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் சிறுநீரகம், கணையம், கல்லீரல் போன்ற உறுப்புகளை தானம் வழங்கினால் அவர்கள் இந்த தற்செயல் விடுப்புக்கு தகுதியானவர்கள். உடல் உறுப்புகளை ஒருவரிடம் எடுப்பது என்பது மிகப்பெரிய அறுவைச் சிகிச்சையாகும். அப்படி உடல் உறுப்பு எடுக்கப்பட்ட பிறகு குணமாவதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது.
இதையும் படிங்க: நீட் விவகாரத்தில் விஜய் ரியாக்ஷன்...எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த.. நாட்டிலே...எம்ஜிஆர் பாடலை சொல்லி பதிலடி...

உறுப்பு மாற்று சிகிச்சைக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிப்பது, மாற்று அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு குணமடைவதற்காக ஓய்வெடுப்பது போன்றவற்றுக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. அதற்கு 42 நாள் சிறப்பு தற்செயல் விடுப்பை மருத்துவமனையில் சேர்ந்த நாளில் இருந்து மத்திய அரசு ஊழியர்கள் எடுக்க முடியும்.அல்லது அரசு மருத்துவர் அறிவுரையின்படி சிகிச்சைக்கு ஒரு வாரத்துக்கு முன்கூட்டியும் இந்த தற்செயல் விடுப்பை எடுத்துக் கொள்ளலாம்" என அனில் குமார் கூறினார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி அன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கான கெஸட் அறிவிப்பு வெளியிடப்பட்ட கடந்த 4 -ந் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது.
முன்னதாக இந்த விடுமுறை 30 நாட்களாக இருந்தது. தற்போது 42 நாட்களாக அதிகரிக்கப்பட்டு இருப்பதன் மூலம் உடல் உறுப்புகள் தானம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பதிவு பெற்ற அரசு மருத்துவர் வழங்கும் பரிந்துரையின் அடிப்படையில் இந்த விடுமுறை அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விடுமுறையை மற்ற விடுமுறை நாட்களுடன் இணைத்து எடுக்க அனுமதி இல்லை.
இதையும் படிங்க: நீதிமன்றமா-மத்திய அரசா?: தேர்தல் ஆணையர் நியமன வழக்கு: பிப்ரவரி 4ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்