ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்கள் ஆர் ஆர் பி எனப்படும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரயில்வேயில் உதவி லோகோ பைலட் பதவிக்கான ஆட்சேர்ப்பு பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டது. மொத்தம் 493 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கான எழுத்துத் தேர்வு முடிந்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் மொத்தம் 6,315 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2ஆம் கட்டத்தேர்வு மார்ச் 19ல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்வு அருகாமை மையங்களில் நடந்த நிலையில், 2ஆம் கட்ட ரயில்வே தேர்வில் தமிழக தேர்வர்களுக்கு தெலுங்கானாவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழக மக்கள் தேர்ந்தெடுத்த எம்.பி.க்களை அநாகரீகமாக பேசுவதா.? தர்மேந்திர பிரதானை வறுத்தெடுத்த செல்வபெருந்தகை!

இந்த நிலையில், தெலுங்கானாவில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். திருப்பெரும்புதூர் விழா ஒன்றில் பேசிய ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் அவர்கள், தமிழ் கலாச்சாரத்தை மிகவும் மதிக்கின்றோம் என்று வார்த்தை பந்தல் கட்டியிருக்கிறார். ஆனால், ஒன்றிய அரசு எப்போதும் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறது என்பது இவர்களின் செயல்பாடுகளை கவனித்தால் புரியும் என கூறினார்.

தமிழ்நாட்டிற்கு கல்விக்கு, பேரிடர்நிதி தராமல் வஞ்சிப்பது, தமிழர்களை அவதூறாக பேசுவது, வரிவருவாயில் குறைந்த அளவு நிதிஒதுக்குவது, தமிழ்மொழிக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவது, சென்னை வழியாக செல்லும் அனைத்து ரயில்களிலும் உள்ள முன்பதிவில்லாத பெட்டிகளை ஒன்றிய ரயில்வே துறை குறைக்க நடவடிக்கை எடுத்தது என்று சொல்லிக் கொண்டே போகலாம் என தெரிவித்தார்.
தற்போது ரயில்வேயில் உதவி லோகோ பைலட் பணிக்கான முதற்கட்ட தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 6,315 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் இரண்டாம் நிலைத்தேர்வுக்கு இவர்களில் பலருக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம் அமைத்துள்ளதாக தகவல் வருகிறது., தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் தேர்வு எழுதி ஒன்றிய அரசு பணிகளுக்கு வராமல் தடுப்பதே இவர்களின் நோக்கம் என்று புரிகிறது என்று கூறினார்.

ஒன்றிய ரயில்வே துறையின் இச்செயலுக்கு தனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் வெளிமாநிலங்களில் தேர்வு மையம் அமைத்திருப்பதை உடனடியாக ரத்து செய்து தமிழ்நாட்டில் அவர்களை தேர்வு எழுத ஏற்பாடுகளை செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: மாணிக்கம் தாகூருடன் பனிப்போரா? - சிரித்துக்கொண்டே செல்வப்பெருந்தகை கொடுத்த பதில்...!