திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இந்த நாள் எனக்கு மிகவும் ராசியான நாள் ஆகும். கடந்த 2001 ஏப்ரல் மாதம் இதே நாளில் அம்பேத்கர் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு நெல்லை எக்ஸ்பிரஸில் சென்னைக்கு புறப்பட்டு சென்றேன்.
அப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நெல்லை சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட எனக்கு வாய்ப்பு வழங்கினார். அது நடந்து 25 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது பிரதமர் மோடி, தேசிய தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தமிழகத்தின் பாஜக தலைவர் என்ற மிகப்பெரிய பொறுப்பினை எனக்கு வழங்கியுள்ளனர்.

அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியவர் அம்பேத்கர். ஆனால், அரசியல் சாசன சபையில் அம்பேத்கருக்கு இடத்தை கொடுக்க காங்கிரஸ் கட்சி மறுத்தது. அம்பேத்கர் என்ன செய்தார் என்பதை அனைவரும் அறிய வேண்டும். அவருடைய நினைவிடங்களைக்கூட காங்கிரஸ் கட்சி பராமரிக்கவில்லை. மத்தியில் பாஜக பொறுப்பேற்ற பின்னர் அம்பேத்கரின் நினைவாலயம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் புதுப்பிக்கப்பட்டன. தமிழகத்தில் அம்பேத்கர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை சிறைச்சாலையில் அடைப்பதுபோல் கூண்டில் வைத்து அடைத்துள்ளார்கள். இதனை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அதிமுக - பாஜக கூட்டணி எந்த இழுபறியும் இல்லாமல் அமைந்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் உள்ளது. துணை முதல்வர் பதவி உள்ளிட்டவை குறித்து இப்போதைக்கு எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.
அமைச்சர் பொன்முடி பேசிய பேச்சு அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. அமைச்சர் பொன்முடியின் பேச்சை ஒவ்வொரு வீட்டு பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் நினைத்து பார்க்க வேண்டும். 2026இல் அதை நினைத்து பார்த்து தேர்தலில் வாக்களிக்க வேண்டும். அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் பயப்படுகிறார்" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மதுபோதையில் திமுகவினர் அராஜகம்..! எங்க இருந்து துணிச்சல் வருது..? அண்ணாமலை விளாசல்..!
இதையும் படிங்க: பொன்முடியின் தூக்கத்தைக் கெடுத்த வானதி சீனிவாசன்... இன்று மாலை அதிரடி அறிவிப்பு!