அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு அருகில் பிரதமர் நரேந்திர மோடி சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் அமர்ந்திருப்பதைப் போன்று கார்ட்டூன் ஒன்று விகடனின் இணைய இதழான விகடன் ப்ளஸ்ஸில் வெளியிடப்பட்டது.
இந்த கார்ட்டூன் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில், விகடனின் இணையதளம் (www.vikatan.com) கடந்த மாதம் 15-ம் தேதி முடக்கப்பட்டது. இந்நிலையில், தொலைத்தொடர்புத் துறைக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அளித்த பரிந்துரையின்படி, விகடன் பத்திரிகையின் இணையதளம் இந்தியாவில் முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விகடன் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது இந்த வழக்கின் விசாரணை நீதிபதி பரதசக்ரவர்த்தி முன்பு நடைபெற்றது.
இதையும் படிங்க: அண்ணாமலை புகாரின் பேரிலேயே விகடன் இணையதளம் முடக்கம் - பாஜ மாநில பொருளாளர் தகவல்
ஆனந்த விகடன் நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன் ஆஜராகி வாதிட்டார். இது ஊடக சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்றும், இந்திய இறையாண்மைக்கு எதிரானது அல்ல என வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, இணையதளம் முடக்கத்தை நீக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளார். அதேசமயம் சம்பந்தப்பட்ட கார்ட்டூனை பிளாக் செய்யுமாறு நிறுவனத்துக்கும் அறிவுறுத்தி உள்ளார்.

பத்திரிகை சுதந்திர குறியீட்டின்படி மொத்தமுள்ள 180 நாடுகளில் இந்தியா 159-வது இடத்தில் உள்ளது. அதாவது பாகிஸ்தானை விடவும், இலங்கையை விடவும், நேபாளத்தை விடவும் இந்தியாவில் பத்திரிகையாளர்கள் அச்ச உணர்வுடன் செயல்பட வேண்டிய இடத்தில் இருப்பதாக இந்த புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன.
உலகின் 2-வது ஜனநாயக நாடு என்று மார்தட்டிக் கொள்ளும் இந்தியா, விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு இன்னும் தயாராகவில்லை என்பதே இதன்பொருள். தங்களை கேள்வி கேட்பதையும், விமர்சிப்பதையும் அரசியல்வாதிகள் விரும்புவதில்லை. ஆனால் தேர்தலுக்கு தேர்தல் ஆட்சியாளர்கள் மாறக்கூடும். ஆனால் ஜனநாயகத்தின் உயரிய விழுமியங்களில் ஒன்றான பத்திரிகையாளர்கள் மாறப்போவதில்லை. யார் தவறு செய்தாலும் அதனை சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பு ஊடகத்துறையினருக்கு உண்டு. அப்படிப்பட்ட ஊடகவியலாளர்கள் தான் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழலிலும், குறைவான ஊதியத்திலும், போதிய தொழில்நுட்ப வசதிகள் இல்லாமலும், சட்டரீதியான பாதுகாப்பு இல்லாமலும் இந்தியாவில் பணியாற்றி வருவதாக மேற்காணும் பட்டியல் எடுத்துரைக்கிறது.

கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆட்சியாளர்களின் அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்பியதே இவர்கள் செய்த தவறு.. இந்த சூழ்நிலையில் ஆனந்த விகடன் விவகாரத்தில் மத்திய அரசை நோக்கி சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகள் ஜனநாயகத்தின் மீது சற்று நம்பிக்கை அளிக்கின்றன.
இதையும் படிங்க: தொகுதி மறுசீரமைப்பு பற்றி மத்திய அரசு இன்னும் எதுவும் சொல்லவே இல்லை.. ஸ்டாலின் ஆக்ஷனுக்கு சந்திரபாபு ரியாக்ஷன்.!