தமிழக சட்டசபையில் மும்மொழிக் கொள்கை திணிப்பை எதிர்க்கும் கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. அதற்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, இருமொழிக்கொள்கை விவகாரத்தில் பா.ஜ.க.வை தவிர்த்து அனைத்து கட்சிகளும் தங்களது உணர்வை வெளிப்படுத்தி உள்ளதாக கூறினார். தமிழும், ஆங்கிலமும் தான் தமிழ்நாட்டின் இரு மொழிக் கொள்கை என்றும் அதில் எந்த மாற்றமும் இல்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

மத்திய அரசு தமிழகத்துக்கு உரிய நிதியை தராவிட்டாலும் இனமானத்தை அடகு வைக்கும் கொத்தடிமைகள் நாங்கள் அல்ல என்றும் இது பண பிரச்சனை அல்ல இன பிரச்சனை என கூறினார். இந்தியை ஏற்காவிட்டால் பணம் தர மாட்டோம் என்று மிரட்டினாலும் கூட பணமே வேண்டாம், தாய்மொழியை காப்போம் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்றார்.
இதையும் படிங்க: சிரிப்பலையில் மூழ்கிய சட்டப்பேரவை... சபாநாயகரின் பேச்சால் சுவாரஸ்யமான விவாதம்!!

இந்தி மொழியால் தான் பணம் வரும் என்று கூறினால் அந்த பணமே வேண்டாம் என தீர்மானிப்போம் என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், திராவிட ஆட்சியில் தமிழ் மொழி காப்பதே இரு கண்கள் என்றும் கூறினார். யார் எந்த மொழியை கற்கவும் நாம் தடையாக இருந்ததில்லை என்றும் எந்த மொழிக்கும் எதிரானவர் அல்ல நாம் எனவும் விளக்கமளித்தார். மற்றொரு மொழியை திணிக்க அனுமதித்தால், அது நம் மொழியை மென்று தின்றுவிடும் என்பதை அறிந்துள்ளதாகவும், இந்தி திணிப்பு மூலம் ஒரு இனத்தை ஆதிக்கம் செய்ய நினைப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

மாநிலங்களை தங்கள் கொத்தடிமைகளாக நினைப்பதாலேயே மொழியை திணிப்பதாகவும் மாநில உரிமையை நிலைநாட்டுவதற்கு தமிழ் மொழி காப்பதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என்றும் திட்டவட்டமாக கூறினார். மேலும், மாநில சுயாட்சியை உறுதி செய்து மாநில உரிமையை நிலைநாட்டினால் தான் தமிழ் மொழியை காக்க முடியும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முடிஞ்சா அணை கட்டுங்க பார்க்கலாம்... ஆவேசமாக பேசிய அமைச்சர் துரைமுருகன்!!