பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு 5 ஆண்டுகள் முடிவடைவதற்குள் 2வது முறையாக இடைத்தேர்தலை சந்திக்கிறது ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி.
ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்த ஈவிகேஎஸ். இளங்கோவன் சமீபத்தில் உடல்நலக்குறைவால் மறைந்தார். இதற்கு முன்பு அந்தத் தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருந்த இவரது மகன் மறைந்தார். இதனால், அடுத்து நடந்த இடைத்தேர்தலில் இளங்கோவனுக்கு காங்கிரஸ் சார்பில் சீட்டு கொடுக்கப்பட்டது. அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலினே காங்கிரஸ் தலைமையிடம் நேரடியாகப் பேசி இளங்கோவனை போட்டியிடச்செய்து வெற்றிபெற வைத்தார். ஆனால் இந்த, இடைத் தேர்தலில் நேரடியாக ஆளுங்கட்சியான திமுகவே களம் காண முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

கடந்த 22-ம் தேதி சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்திலும் ஈரோடு நிர்வாகிகள் திமுக போட்டியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். 2021 தேர்தலில் ஈவிகேஎஸ். இளங்கோவன் மகன் திருமகன் ஈவேரா போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், அவர் மாரடைப்பு ஏற்பட்டு கடந்த ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி காலமானார். அதன்பிறகு நடைபெற்ற இடைத் தேர்தலில் அவரது தந்தையும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார் .ஆனால், அவரும் துரதிருஷ்டவசமாக சமீபத்தில் காலமானார்.
இதையும் படிங்க: பதுங்கும் எடப்பாடி... ஒதுங்கும் பாஜக... ஜி.கே.வாசன் தலையை பதம் பார்க்க ரெடி... அண்ணாமலையின் அடடே அரசியல் கணக்கு
இந்நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி காலியானதாக அறிவித்து இடைத் தேர்தலை நடத்தும்படி தமிழக சட்டப்பேரவை செயலகம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறது. விரைவில் அந்த தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்படவிருக்கிறது. இந்த முறை ஈரோடு கிழக்குத் தொகுதியில் திமுகவே போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் இது தொடர்பாக ராகுல்காந்தியிடம் திமுக தலைமை விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக தகவல்கள்.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளே இருக்கும் நிலையில், நடைபெறவுள்ள ஈரோடு கிழக்குத் தொகுதியில் திமுகவே நேரடியாக வேட்பாளரை நிறுத்தி மீண்டும் வெற்றியை ஈட்டினால் அது வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பக்க பலமாக இருக்கும் என்றும் 5 வருடத்திற்குள் ஒரே தொகுதியில் நடைபெறும் மூன்றாவது இடைத் தேர்தல் என்பதால் இதில் வெற்றி பெற்று காட்டினால், திமுக ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டுவிட்டதாக தெரியவரும். ஆகவே ஈரோடு கிழக்குத் தொகுதியில் இந்த முறை திமுகவே போட்டியிடவுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் திமுக போட்டியிட்டால் வேட்பாளர் யாராக இருக்கும் என்கிற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோ கிழக்குத் தொகுதியை பொறுத்தவரை முதலியார் சமூகத்தினர் அதிகம் வசிக்கின்றனர். அந்த சமுதாயத்தை சார்ந்த ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த தொகுதியில் முதலியார் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ சந்திரகுமார், மாவட்ட துணைச்செயலாளர் செந்தில் குமார், மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் விவேக், இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் எனக் கூறப்படுகிறது.

திமுகவின் இந்த முடிவு குறித்து விரைவில் திமுக மக்களவை குழுத் தலைவரும், திமுகவின் பொருளாளருமான டி.ஆர்.பாலு, காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி, அக்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூனா கார்க்கேவிடம் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், ஈரோடு கிழக்குத் தொகுதியை திமுக போட்டியிட விட்டுக்கொடுத்தால், அது காங்கிரஸ் கட்சிக்கு பலவீனமாகிவிடும். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் கூடுதல் சீட் கேட்டு வாங்கி போட்டியிடுவதில் சிரமங்கள் இருக்கும் என காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கருதுகின்றனர். ஆகையால், இந்த முறையும் காங்கிரஸ் போட்டியிடுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அகில இந்திய தலைமைக்கு தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கடிதம் எழுதத் தயாராகி வருகிறார்களாம். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மூலம் காங்கிரஸ் தலைமைக்கு அழுத்தம் கொடுக்கவும் ஆயத்தமாகி வருகிறார்களாம். ஆக மொத்தத்தில் கதர் சட்டைகளை கதறடித்து வருகிறது திமுக தலைமை.
இதையும் படிங்க: பி.கே- ஆதவ் அர்ஜூனாவிடம் சிக்கிய திமுக-வினரின் ரகசியம்..? பென் நிறுவனத்தையும் பிடரியில் அடிக்கும் உ.பிக்கள்..!