வக்பு திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பாஜக சார்பில் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் பாஜக சிறுபான்மையினர் பிரிவின் தேசிய தலைவர் வேலூர் இப்ராகிம் பங்கேற்பதாக இருந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வேலூர் இப்ராகிம் மதுரை வந்திருந்தார். நத்தம் புறப்பட்ட அவரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதன் பின்னர் வேலூர் இப்ராகிம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,“மத்திய அரசின் வக்பு சட்டத் திருத்த சட்டத்தால் வக்பு வாரிய சொத்துகள் பாதுகாக்கப்படும். இச்சட்டத்தால் இஸ்லாமியர்களுக்குப் பலன் கிடைக்கும். வக்பு திருத்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் பிரச்சாரம் செய்து வருகின்றன. இதை வைத்து இஸ்லாமியர்களை அச்சுறுத்தி வருகின்றனர். இச்சட்டத்துக்கு எதிராகப் போராடுமாறு இஸ்லாமியர்களை முதல்வர் மு.க.ஸ்டாலினும் திமுக கூட்டணி கட்சியினரும் தூண்டி வருகின்றனர்.

பாஜக சார்பில் வக்பு சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக கூட்டங்கள் நடத்தப்பட்டு இஸ்லாமியர்களிடம் இச்சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டங்களில் பேசுவதற்காக செல்லும் என்னை போலீஸார் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். பாஜகவினர் முறையாக அனுமதி பெற்றுதான் கூட்டங்களை நடத்துகின்றனர். இதில் என்னை பங்கேற்க விடாமல் தடுத்து அற்பத்தனமாக வாக்கு வங்கி அரசியலை தமிழக முதல்வர் செய்து வருகிறார். தமிழகம் முழுக்க இந்துக்கள், இஸ்லாமியர்கள் மத்தியில் கலவரத்தை ஏற்படுத்தி 2026 தேர்தலில் வெற்றிபெற திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் திட்டமிட்டுள்ளன. இதை பாஜக வேடிக்கை பார்க்காது.
இதையும் படிங்க: அதிமுக - பாஜக கூட்டணி உருவானது எப்படி.? விஜய்யை வைத்து பின்னணியில் நடந்த அரசியல்.. அம்பலப்படுத்திய குருமூர்த்தி!

தமிழகம் முழுவதும் வக்பு சொத்துகள் ஆளும் கட்சியினர் வசம்தான் உள்ளன. மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், அசாம் மாநிலங்களில் வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்களைப் போராட தூண்டி வருகின்றனர். இதனால் அங்கு வன்முறை நிகழ்ந்துள்ளது. அதேபோல் அமைதிப் பூங்காவான தமிழகத்திலும் கலவரத்தைத் தூண்ட சதி செய்து வருகின்றனர். காவல்துறை ஏவல் துறையாக மாறக் கூடாது. போலீஸார் ஜனநாயக முறைப்படி நடந்து கொள்ள வேண்டும். போலீஸாரை வைத்து அடக்குமுறையை ஏவிவிடும் திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதுதான் பாஜகவின் ஒரே வேலை,” என்று வேலூர் இப்ராகிம் கூறினார்
இதையும் படிங்க: தமிழகத்தில் இ.கம்யூ. ஒரு நாள் ஆட்சி அமைக்கும்.. ஆசையை வெளிப்படுத்திய திமுக கூட்டணி கட்சி.!