மத்திய உள்துறை அமித் ஷாவின் சென்னை பயணத்தின் ஒரு பகுதியாக அதிமுக - பாஜ கூட்டணி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 2026 சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிமுக தலைமையில் போட்டியிடும் என அமித் ஷா அறிவித்தார். மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தது குறித்து எதிராகவும், ஆதரவாகவும் பலர் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டலினோ, இரண்டு ரெய்டுகளுக்குப் பயந்து அ.தி.மு.க.வை அடமானம் வைத்தவர்கள், தமிழ்நாட்டை அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள் என காட்டமாக விமர்சித்தார். குறைந்தபட்ச செயல்திட்டம் என்று சொல்கிறார்களே அதில் மாநில உரிமைகள், மொழியுரிமை, நீட் விலக்கு ஆகியவை இடம் பெறுமா என்றும் கேள்வி எழுப்பி இருந்தார். இந்த கூட்டணியை தமிழக மக்கள் மீண்டும் நிராகரிப்பார்கள் எனவும் கூறி இருந்தார்.

இந்தநிலையில் இதற்கு பதிலளித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தி.மு.க. தலைவரும், விடியா திமுக அரசின் முதல்வருமான மு.க.ஸ்டாலின், தினமும் என்ன பிரச்சனை வரப்போகிறது என்று தன் தூக்கம் தொலைந்துவிட்டதாக ஒருமுறை திமுக பொதுக்குழுவில் சொன்னார்.
நேற்று முன்தினம் அவருடைய அமைச்சர் பொன்முடியின் அருவருக்கத்தக்க ஆபாசப் பேச்சு அவர் தூக்கத்தை கெடுத்தது. இன்றோ, அஇஅதிமுக-வின் கூட்டணி அறிவிப்பு இடிபோல் வந்து அவருக்கு இறங்கியுள்ளது போலும்! பீதியின் உச்சத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். தி.மு.க. செய்த வரலாற்றுப் பிழைகள் இந்த கூட்டணி மூலம் திருத்தி எழுதப்படும் என்று நேற்று நான் எனது எக்ஸ் சமூக வலைதளத்தின் வாயிலாக பதிவு வாயிலாக தெரிவித்தேன்.
இதையும் படிங்க: அமித் ஷா, எடப்பாடியை லெப்ட் ரைட் வாங்கிய ஸ்டாலின்... அடுக்கடுக்காய் அதிரடி கேள்விகளால் துளைத்தெடுப்பு...!

தமிழ்நாட்டு நலனுக்கான "குறைந்தபட்ச செயல் திட்டம்" இருக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுன் அறிவித்திருந்தார். "என்னவா இருக்கும்?" என்று இரவு முழுக்க தூக்கத்தை தொலைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காலையில் தனது மொத்த வரலாற்றுப் பிழைகளையும் வெற்று நாடகங்களையும் தொகுத்து அதனை அறிக்கையாக வெளியிட்டுவிட்டார். மணிப்பூர் மாநிலப் பிரச்சனைகள் பற்றி உங்களுக்கு இருக்கும் அக்கறை, துளியாவது உங்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக பெண்கள் மீது இருந்ததா? அவர்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்த உங்களுக்கு சட்டம் ஒழுங்கு பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?

"NEET என்றால் என்ன? அதனை இந்திய நாட்டிற்கே அறிமுகப்படுத்தியது யார்? அதனை உச்சநீதிமன்றம் வரை வாதாடி நிலைபெறச் செய்தது எந்த கூட்டணி?"- இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு, பிறகு நீட் பற்றி பேசுங்கள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே- நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! அதிமுக ஒருபோதும் தமிழ்நாட்டை, நம் மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காது! மாறாக, நமக்கான மாநில உரிமைகளை பெற்றுத் தரவே செய்யும்! காவிரி உரிமையை பெங்களூரிலும், முல்லைப் பெரியாறு அணை உரிமையை திருவனந்தபுரத்திலும் அடகு வைத்த தி.மு.க.வின் தலைவர் அதைப் பற்றி கவலைப் பட வேண்டாம்!

தமிழ்நாடு விரோத தி.மு.க. வின் ஊழல் ஆட்சியை தோலுரித்து, மக்களின் பேராதரவோடு அதிமுக தலைமையிலான கூட்டணி 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாகை சூடும்! (பின் குறிப்பு : ரெய்டுகளுக்கு பயந்து, "தொட்டுப் பார்- சீண்டிப் பார்" வீடியோ கூட வெளியிட முடியாத அளவிற்கு தொடை நடுங்கிக் கொண்டிருப்பது யார் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்) என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆபாசப் பேச்சு..! பொன்முடியை கண்டித்து அதிமுக மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்..!