''10 மசோதாக்கள் குறித்து முதல்வருக்கு கொடுக்கப்பட்ட தவறான ஆலோசனை'' என வழக்கறிஞரும், அரசியல் விமர்சகருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், ''தமிழகத்தில் உள்ள பல்கலைகளில் துணைவேந்தர் நியமனம் பற்றிய மசோதாக்களின் மீது, கடந்த ஏப்ரல் 8ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, தி.மு.க.,வை பெரும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. மாநில உரிமையை தாங்கள் நிலைநிறுத்திவிட்டதாக பறைசாற்றி வருகின்றனர்.

ஒரு படி மேலாக, 'முதல்வர் மற்ற மாநில முதல்வர்களுக்கு எல்லாம் வழிகாட்டியாக இருக்கிறார்' என்றும் விளம்பரம் செய்கின்றனர். அதே நேரம், 'இது கவர்னருக்கு எதிரான தீர்ப்பு; கவர்னர் தன் கவுரவத்தை காப்பாற்றிக் கொண்டு ராஜினாமா செய்ய வேண்டும்; இல்லை என்றால் தலைகுனிவோடு செல்ல நேரிடும்' என்று தி.மு.க.,வினர் கவர்னரை சீண்டுகின்றனர்.
இதையும் படிங்க: ஊழல் புகார்களை வைத்துதான் கூட்டணி பேரம் நடத்துகிறது பாஜக.. அமைச்சர் ரகுபதி சரமாரி அட்டாக்.!!
கவர்னர் ஆதரவு தரப்போ, 'கவர்னருக்கு தவறான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் அரசு நிர்வாகத்தில் எல்லை மீறி தலையிடுகின்றன' என்றெல்லாம் குரல் கொடுத்து வருகின்றனர்.'மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்ற நிலையில் இருந்து இதை அணுகினால், உண்மை முற்றிலும் வேறாக இருப்பதை உணரலாம்.
தமிழக அரசும் சரி, அதற்கான ஆதரவுக்குரல்களும் சரி, உச்ச நீதிமன்றமும் சரி, அரசியல் அமைப்பின் பிரிவு - 200 என்ற குறுகிய நோக்கில் மட்டும் அணுகி உள்ளன. பிரிவு - 200ன்படி மாநில அரசு கொண்டு வரும் ஒரு மசோதாவை, கவர்னர் மூன்று விதமாக பரிசீலனை செய்யலாம். முதலாவதாக மசோதாவை ஏற்கலாம். இரண்டாவதாக அதை ஜனாதிபதிக்கு அனுப்பலாம். மூன்றாவதாக சட்டசபைக்கே திருப்பி அனுப்பலாம்.

இதுவரை சட்டம் தெளிவாக இருக்கிறது. 'திருப்பி அனுப்பிய மசோதா மீண்டும் வந்தால், அதை கவர்னர் ஏற்க வேண்டும். அவருக்கு வேறு வழியில்லை. இந்த சமயத்தில் அதை ஜனாதிபதிக்கு அனுப்ப முடியாது' என்பது உச்ச நீதிமன்றத்தின் கருத்து. அதுவே, தமிழக அரசின் கருத்து. ஆனால், அரசியலமைப்பு சட்டத்தின் கருத்து என்ன என்ற கேள்வி வரும்போது, இதில் ஒரு நுட்பம் உள்ளதை நாம் உணரலாம்.
மசோதாக்கள் மூன்று வகைப்படும்.நிதி மசோதா; முழுக்க மாநில பட்டியலில் உள்ள விஷயம் தொடர்பான மசோதா. மத்திய - மாநில அரசுகளின் பொதுப் பட்டியலில் உள்ள விஷயம் தொடர்பான மசோதா என மூன்று வகைகள். நிதி மசோதாவை கவர்னர் ஒன்றும் செய்ய முடியாது; அப்படியே ஏற்க வேண்டும். மாநில பட்டியல் விஷய மசோதாவை ஒருமுறை திருப்பி அனுப்பலாம்; மறுமுறை வந்தால் ஏற்க வேண்டும்.

பொதுப்பட்டியல் விஷய மசோதாக்களுக்கு, அரசியலமைப்பின் பிரிவு - 200 பொருந்தாது. அது, பிரிவு - 254ன் கீழ் மட்டுமே பரிசீலிக்கப்பட வேண்டும். இதன்படி வரும் ஒரு மசோதாவில், மாநில அரசு இயற்றும் சட்டம், மத்திய அரசின் சட்டத்தோடு மோதுவதாக அமைந்தால், மத்திய அரசின் சட்டமே செல்லுபடியாகும்.
இப்படிபட்ட விஷயத்தில், மாநில அரசு கொண்டு வந்த மசோதாவை, கவர்னர் ஏற்க வேண்டிய அவசியமில்லை. அறிவுறுத்தி, திருப்பியும் அனுப்பலாம். அது மீண்டும் வந்தால், அதை ஜனாதிபதிக்கும் அனுப்பலாம். இது, சட்டசபையில் இரண்டு முறை நிறைவேறியதே என்ற கேள்விக்கே இடமில்லை. இது, நடைமுறை மீறலும் ஆகாது.
இங்கு தமிழக அரசு கொண்டு வந்துள்ள 10 மசோதாக்களும் உயர் கல்வி சம்பந்தப்பட்டவை. அதாவது, பொதுப்பட்டியல் சார்ந்த மசோதா. எனவே, பிரிவு - 200 செல்லாது. பிரிவு - 254ன் அடிப்படையில் மட்டுமே பார்க்க வேண்டும்.

பல்கலைக் கழகங்களில் கவர்னரை வேந்தர் பதவியில் இருந்து நீக்குவது மற்றும் துணைவேந்தர்களை நியமிக்கும் குழுவில், யுஜிசி உறுப்பினரை சேர்க்க முடியாது என்பதுதான். இந்த 10 மசோதாக்களின் சாராம்சம். மாநில கவர்னர் வேந்தராக இருப்பார் என்பது மத்திய அரசின் சட்டம். யு.ஜி.சி., உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்பதும் மத்திய அரசின் சட்டம்.
இவை இரண்டையும் இந்த 10 மசோதாக்களும் மீறுவதால், அவற்றுக்கு எப்போதுமே உயிர் இல்லை. உயிர் இல்லாத மசோதாவை, கவர்னர் எத்தனை காலம் வைத்திருந்தாலும் நஷ்டம் என்ன? ஒருவேளை ஜனாதிபதி, விதிவிலக்காக அனுமதி அளிக்கக்கூடும் என்ற நிலையில் அதை எப்போது வேண்டுமானாலும் அவருக்கு அனுப்பலாம் என்பது, சட்டப்பிரிவில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் ஒரு சிறிய விளக்கம்... 'குஜராத் போன்ற மாநிலங்களில், மாநில முதல்வரே வேந்தராகவும் இருக்கிறாரே... அவர்களுக்கு ஒரு சட்டம், தமிழகத்துக்கு ஒரு சட்டமா? இதுவும் யுஜிசி விதிமுறைக்கு மீறியது ஆகாதா?' என்ற சந்தேகம் எழலாம்.

பொதுப்பட்டியல் தொடர்பான ஒரு மசோதாவில், ஒரு மாநில அரசு, தனக்கு விதிவிலக்கு வேண்டுமென்றால், நிறைவேறிய மசோதாவுக்கு ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெற வேண்டும். அப்படித்தான் குஜராத் அரசு, இந்த சலுகையை பெற்றுள்ளது. பல வடகிழக்கு மாநிலங்களும் பல்வேறு விதிவிலக்குகளை ஜனாதிபதியிடம் பெற்றுள்ளன. ஜனாதிபதி நிராகரித்துவிட்டால், அந்த மசோதா நீர்த்துப்போகும்.
எனவே, தவறான ஆலோசனை, முதல்வருக்குத்தான் வழங்கப்பட்டுள்ளது. அதிகாரம் இல்லாத ஒன்றை, இருப்பது போல் பாவித்துக் கொண்டாடுகிறார். மேல்முறையீட்டுக்குப் போனால், மொத்தமும் காலியாகிவிடும். அதுவரை ஆடுவார் ஆட்டமும், பாடுவார் பாட்டும் விமரிசையாக நடைபெறும்'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: துண்டுச் சீட்டில் புது யுக்தி..! தலைவரின் ஸ்டைலை உல்டாவாக்கிய திமுக எம்.பி., கல்யாணசுந்தரம்..!