திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் இரண்டு நண்பர்களுக்கு மத்தியில் பென்சில் வாங்குவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இரண்டு மாணவர்களும் பேசாமல் இருந்து வந்த நிலையில் தன்னுடைய புத்தகப் பையில் மறைத்து வைத்து கொண்டு வந்த அரிவாளை எடுத்து மற்றொரு மாணவர் தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலை தடுக்க முயன்ற ஆசிரியருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. தகவறிந்து வந்த காவல்துறையினர் தாக்குதலில் ஈடுபட்ட மாணவனை குழந்தைகள் நலத்துறையிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் தாக்குதலுக்கு ஆளான மாணவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் கூறினர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தனர். இந்த நிலையில் பள்ளிச் சிறார்கள் கைகளிலும் பயங்கர ஆயுதங்கள் புழங்குமளவிற்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடப்பது பெரும் ஆபத்தானது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது எக்ஸ் தள பதிவில், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பள்ளி வகுப்பறைக்குள்ளேயே எட்டாம் வகுப்பு மாணவனை சக மாணவன் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
இதையும் படிங்க: அடுத்த முறையும் ஸ்டாலின் தான் CM... அடித்து சொல்லும் அமைச்சர்..!

தடுக்க வந்த ஆசியரையும் அம்மாணவன் தாக்கியுள்ளதும் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. காயமடைந்த மாணவனும், ஆசிரியரும் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன். தினமொரு கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் மற்றும் சாதிய ரீதியான தாக்குதல் ஆகியவை வரிசை கட்டிக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலினின் அலங்கோல ஆட்சியில், பள்ளிச் சிறார்கள் கைகளிலும் பயங்கர ஆயுதங்கள் புழங்குமளவிற்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடப்பது பெரும் ஆபத்தானது. அதுவும், பென்சில் கேட்ட தகராறில் தாக்குதல் நடந்துள்ளது எனக் கூறுகிறார் நெல்லை உதவி காவல் ஆணையர்.

ஆனால், பென்சிலுக்காக பள்ளிக்குள் அரிவாளை மறைத்து எடுத்துச் சென்று உடன் படிக்கும் மாணவனைத் தாக்குமளவிற்கு நமது பிள்ளைகளின் மனதில் வன்முறை வேர் படர்ந்துள்ளதா என்ற சந்தேகம் தமிழக மக்கள் மத்தியில் வலுக்கிறது. எனவே, இந்த சம்பவத்தில் உண்மை நிலவரம் என்ன என்பதை முறையாக ஆராய்ந்து அதற்கு தக்க நடவடிக்கைகள் எடுப்பதோடு, இனியும் பள்ளிக் குழந்தைகள் மத்தியில் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நிகழாமலிருக்க தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமெனவும் முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அஞ்சும் திமுக..! வேட்டையாடத் துடிக்கும் பாஜக… அமித் ஷாவின் அதிர வைக்கும் அரசியல் கணக்கு..!