தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத வரை ஒருங்கிணைந்த கல்வி திட்டத்துக்கான (எஸ்.எஸ்.ஏ) நிதியை விதிமுறைகளின்படி வழங்க முடியாது என்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார். அவருடைய கருத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டமாக விமர்சனம் செய்திருந்தார். "மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம்! ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி! அதற்கு ஒன்றிய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல!

"மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது" என்று blackmail செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்!எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம்! உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்..." என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக
அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "முதலமைச்சர் உள்ளிட்ட தமிழக அமைச்சர்களின் மகன், மகள் அல்லது பேரன் பேத்திகள் படிக்கும் தனியார் பள்ளிகளில், மும்மொழிகள் பயிற்றுவிக்கலாம். எங்கள் வீட்டுக் குழந்தைகள் பயிலும் அரசுப் பள்ளிகளில், தமிழ், ஆங்கிலம் மற்றும் மூன்றாவது ஒரு இந்திய மொழி என மும்மொழிகள் கற்பிக்கக் கூடாதா?

தமிழகம் முழுவதும் திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில், பெரும்பாலும் சிபிஎஸ்இ மும்மொழி பாடத்திட்டமே இருக்கிறது. அரசுப் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை? பணம் இருந்தால் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டும் என்று கூறுகிறாரா முதலமைச்சர்? தற்போது 2025ஆம் ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. இன்னும், உங்கள் 1960-களின் காலாவதியான கொள்கையைத் தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது என்ன நியாயம்?” என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்துக்கு கல்வி நிதியை மறுப்பதா..? மத்திய கல்வி அமைச்சருக்கு ஆணவம்.. கொந்தளிக்கும் வைகோ.!