‘‘சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பிரச்சனை தமிழக முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. திருமாவளவன் எங்கே? அறிவாலயத்தை சுத்தம் செய்து கொண்டிருக்கிறாரா? அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், அண்ணா பல்கலை மாணவி விவகாரம் தொடர்பாக நியாயம் கேட்டு போராட்டம் நடத்துவாரா?
அண்ணா பல்கலை விவகாரத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்று சொன் திருமாவளவன், பாதிக்கப்பட்ட பெண் பட்டியலின பெண்ணாக இருந்தால் இதே நிலைப்பாட்டில் இருப்பாரா? அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் அண்ணாமலை செய்வது ஆதாய அரசியல் என்கிற திருமாவளவன் எதுவும் செய்யாமல் இருப்பதுதான் ஆதாய அரசியல்’’ என இந்த விவகாரத்தில் பலமாக விமர்சிக்கப்பட்டு வந்த திருமாவளவன் தாமதமாக விழித்துக் கொண்டு இருக்கிறார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரத்தில் 'யார் அந்த சார்?' என்று நேர்மையான விசாரணை தேவை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் புகுந்த வெளி நபர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மாணவியை வல்லுறவு செய்வதற்கு முன்னதாக ஒருவரிடம் தொலைபேசியில் சார் என குறிப்பிட்டு பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குற்றவாளி தொலைபேசியில் கூறிய சார் யார்? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: அரசுக்கு எதிராக கண்டிக்கவும் தெரியும் ..போராடவும் தெரியும்.. கர்ஜிக்கும் திருமா
இப்போது எதிர்கட்சிகளின் சந்தேகங்களுக்கு வலு சேர்த்திருக்கிறார் திருமாவளவன். யார் அந்த சார்? என்பது குறித்து தீவிரமாக அரசு விசாரிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார் திமுகவின் கூட்டணி கட்சியான விசிக தலைவர் திருமா. அதிமுக- பாஜகவை தொடர்ந்து திமுக கூட்டணியில் உள்ள விசிகவும் யார் அந்த சார் என்பது குறித்து விசாரிக்க வலியுறுத்தி இருக்கிறது.
இதுகுறித்து பேசியுள்ள திருமாவளவன், ‘‘குற்றவாளி யாராக இருந்தாலும் நியாயமான புலன் விசாரணை தேவை. குற்றவாளியை பிணையில் வெளியே விடக்கூடாது. சிறையில் வைத்திருந்தே நியாயமான விசாரணை நடத்தி அவருக்கு உரிய தண்டனை தர வேண்டும். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அவ்வப்போது நடந்துள்ள சூழலில் அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு விசிக வேண்டுகோள் விடுத்துள்ளது.

அந்த வகையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை பாலியல் வல்லுறவு செய்த குற்றவாளி கைது செய்யப்பட்டிருந்தாலும் அந்த சம்பவம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக வளாகங்களில் விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்த வழக்கை பொறுத்தவரை கைதாகி இருப்பவரை தவிர்த்து ஒரு சிலர் குற்றத்தில் ஈடுபட்டிருக்க கூடும் என்று சந்தேகம் இருந்துள்ளது. ஆகையால் அரசு நேர்மையான முறையில் புலன்விசாரணை செய்ய வேண்டும் குற்றவாளிகளுக்கு பிணை வழங்கக் கூடாது.
சிறையில் வைத்தபடி புலன் விசாரணை செய்து முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை பெற்று தர வேண்டும். யார் அந்த சார் என்ற கேள்விக்கு நேர்மையான விசாரணை செய்து குற்றவாளி யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும். போராட்டத்துக்கு பல்வேறு கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் அனுமதி மறுக்கப்படவில்லை. இந்த பிரச்சினையை வைத்து அரசியல் செய்வதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக சில போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக நினைக்கிறேன். இருப்பினும் எதிர்க்கட்சிகளில் போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்’’என்றும் திருமாவளவன் வலியுறுத்தி இருக்கிறார்.
சில நாட்களுக்கு முன், ‘‘அண்ணா பல்கலைக்கழக வழக்கில் திமுக நடவடிக்கைகள் வேகமாக இருக்கிறது பாராட்டுக்குரியது’’என்று திருமாவளவன் தெரிவித்திருந்தார். இப்போது அந்த வழக்கில் சந்தேகம் இருப்பதாகவும், யார் அந்த சார்? என்று கேட்பதும் அதே திருமாவளவன்தான்..!
இதையும் படிங்க: ‘திருமா ஏன் இப்படி திமுகவின் கொத்தடிமை ஆனார்..?’- சிறுத்தையை கதறவிடும் அண்ணாமலை குரூப்..!