காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்து கருத்தரங்கில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசினார். "‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்து 10 ஆண்டுகளாக பல மேடைகளில் விவாதம் செய்யப்பட்டு வருகின்றன. நாட்டில் அரசியல் ரீதியாக சில விஷயங்கள் கண்மூடித்தனமாக நடக்கின்றன. நாட்டின் நலனுக்காக எடுக்கப்படும் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். 1960ஆம் ஆண்டு வரை ஒரே நாடு ஒரே தேர்தலாக நடைபெற்றது. மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்கள் மட்டும் ஒன்றாக நடத்தப்படும் என நாம் சொல்கிறோம். உள்ளாட்சி தேர்தல்களை நடத்த வேண்டும் என கூறவில்லை.

இந்த முடிவு பிரதமரும் நான்கு அதிகாரிகளும் சேர்ந்து எடுத்த முடிவு அல்ல. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் 2029ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகுதான் குடியரசுத் தலைவர் தொடங்கி வைக்க உள்ளார். இதற்கு 82 ஏ, 83(7) சட்ட திருத்தங்கள் வர உள்ளன. அதன் வாயிலாக தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் கிடைக்கும். அனைத்து மாநில அரசுகளின் ஆட்சி காலங்களையும் ஒருங்கிணைந்து 2034-க்கு முன்பாக நடைமுறைக்கு வர சாத்தியம் இல்லை.
இத்திட்டம் சிலர் சொல்வதைபோல உடனே நடைபெறக்கூடிய விஷயம் இல்லை. 1961 முதல் 1970 வரை 10 ஆண்டுகளில் பிஹார், கேரளா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கத்தில் தலா 3 முறை தேர்தல் நடைபெற்றது. அடுத்த 10 ஆண்டுகளில் 15 மாநிலங்களில் அடிக்கடி தேர்தல் நடத்தப்பட்டது. இதன் காரணமாக மாநிலங்களின் வளர்ச்சி திட்டப் பணிகள் பெருமளவில் பாதிப்பு ஏற்படுகின்றன. 2019இல் அனைத்து கட்சி கூட்டத்தில் 19 கட்சிகளில்16 கட்சிகள் ஒத்துக்கொண்டன. சி.பி.எம்., உள்ளிட்ட 3 கட்சிகள் மட்டுமே ஒப்புக்கொள்ள வில்லை.

அதனையடுத்து உயர்மட்டக் குழு முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்டது. அந்த உயர்மட்ட குழு 47 கட்சிகளை அழைத்து 32 கட்சிகள் ஒரே தேர்தலுக்கு ஒப்புக்கொண்டன. 15 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. 15 கட்சிகள் தங்கள் கருத்துகளை அளிக்கவில்லை. வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கடி தேர்தலின் போது தேர்தல் நடத்தை விதிமீறல்கள் இடையூறாக உள்ளன. 2019இல் தேர்தலில் 10 லட்சம் பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மக்களவைத் தேர்தலை நடத்த 25 லட்சம் பேர் பயன்படுத்தப்பட்டனர். 2024 மக்களவை தேர்தலுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் செலவாகி உள்ளது.
இதையும் படிங்க: தேர்தல் ஆணையத்துக்கு கட்டுக்கடங்காத அதிகாரம் நல்லதல்ல.. ரஞ்சன் கோகோய் கடும் விமர்சனம்..!

இது ஒரே தேர்தலாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தினால் 12 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்கப்படும். இதனை மக்கள் நல திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம்.
சரத் பவார், பெரியவர் கருணாநிதி தனது சுயசரிதையில் ‘ஒரே நாடு ஒரே தேர்தலை’ ஆதரித்து உள்ளார். ஆனால், தற்போது முதல்வர் ஸ்டாலின் தனது தந்தை சென்ற பாதையில் செல்லாமல் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ நாட்டின் நலன் கருதி கொண்டு வரப்படுகிறது. இதன் முக்கியத்துவம் குறித்து தங்கள் பகுதியில் உள்ள மக்களுக்கு எடுத்து கூறுங்கள்” என்று நிர்மலா சீதாராமன் பேசினார்.
இதையும் படிங்க: பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆதிக்கம் செலுத்திய பாஜக..! என்டிஏ கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமை வலுக்கிறது..!