டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மார்ச் 6 - 8 வரை அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. பின்னர் டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத் துறை அறிக்கை வெளியிட்டது. அமலாக்கத் துறையின் இச்சோதனை அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரியும், அரசு அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையைச் சட்டவிரோதனானது என அறிவிக்க கோரியும் டாஸ்மாக் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கைக விசாரித்த நீதிபதிகள் எம் எஸ் ரமேஷ், என் செந்தில்குமார் அடங்கிய அமர்வு விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவித்தது.

இதையடுத்து இந்த வழக்கு நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “அமலாக்க துறையின் சட்டப்பூர்வமான விசாரணையைச் சீர்குலைக்கும் வகையில், முன்கூட்டியே தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. சோதனை நடத்துவதற்கான வாரண்டை காட்டி, வலுக்காட்டாயமாக கையெழுத்து பெற்றதாக தமிழக அரசு கூறிய குற்றச்சாட்டு ஏற்புடையது அல்ல. சோதனைக்காக வாராண்டை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.

சோதனைக்கு எதிராக அமலாக்கத் துறையிடம் முறையிடும் மாற்று வாய்ப்பு உள்ளது. ஆனால், அதை அணுகி நிவாரணம் கோராமல் நேரடியாக உயர் நீதிமன்றத்தை நாடியது தவறு. டாஸ்மாக்கில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில் மட்டுமே சோதனை நடத்தப்பட்டது. எந்த ஆதாரங்களும் இல்லாமல் சோதனை நடத்தவில்லை.
ஆதாரங்களை சேகரிப்பதற்காக மட்டுமே அதிகாரிகளின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சட்டபூர்வமான சோதனையை முடக்கும் நோக்கில், சட்டவிரோதமாக சிறை பிடித்ததாகவும், துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டுகளை கூறி தமிழக அரசு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது. எனவே, இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அமலாக்கத்துறைக்கு மனசாட்சியே இல்ல..! ஐகோர்ட்டில் டாஸ்மாக் ஊழியர்கள் வாதம்..!
தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், “60 மணி நேரம் சோதனை நடத்தி பெண் அதிகாரிகளை நள்ளிரவு வரை சிறை பிடித்துள்ளனர்.இது மனித உரிமை மீறல் . அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவுக்கு பதில் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,“தமிழக காவல்துறை சோதனை நடத்தியது இல்லையா?” என கேள்வி எழுப்பினர். அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், “தமிழக அரசின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல” என வாதிட்டார்.
இதையடுத்து அமலாக்கத் துறை பதில் மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கி, வழக்கு விசாரணையை ஏப்ரல் 8-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
இதையும் படிங்க: ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல் வழக்கில் விலகிய நீதிபதிகள் : அதிர வைக்கும் பின்னணி..!