நீலகிரியில் எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ''தமிழக மக்களைக் குழப்பத்திலும் திசை திருப்புவதிலும் திமுக அரசு குறியாக இருக்கிறது. காங்கிரஸும் திமுகவும் இணைந்துதான் நீட் தேர்வை கொண்டு வந்தனர். அப்போது மத்தியில் அமைச்சர்களாக இருந்த ஆ.ராசா முதல் டி.ஆர். பாலு வரை யாரும் நீட் தேர்வை எதிர்க்கவில்லை. ஆனால், இன்றைக்கு நீட்டை எதிர்ப்பதாகச் சொல்லி நாடகமாடி வருகின்றனர்.
நீட் தேர்வுக்கு மாணவர்களை நாடு முழுவதும் தற்போது தயார் செய்து வருகிறோம்.

அரசு பள்ளிகளில் பயின்று வரும் பழங்குடியின மற்றும் பட்டியல் சமுதாய மாணவர்கள் அதிக அளவில் நீட் தேர்வில் வெற்றி பெற்று வருகிறார்கள். இந்த நேரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் என்ற பெயரில் போலியான நாடகத்தை முதல்வர் ஸ்டாலின் அரங்கேற்றி உள்ளார். டாஸ்மாக்கில் நடைபெற்று இருக்கும் மெகா முறைகேட்டை திசை திருப்பும் செயலாகவே இதைப் பார்க்க வேண்டி உள்ளது.
ராமேஸ்வரத்தில் பிரதமர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாததற்கு தமிழக முதல்வர் தமிழக மக்களிடையே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். உதகை மருத்துவக் கல்லூரி உட்பட 11 மருத்துவக் கல்லூரிகளை 2022 ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அப்படி ஏற்கெனவே தொடங்கி வைக்கப்பட்ட ஒரு மருத்துவக் கல்லூரியை மீண்டும் தொடங்கி வைத்த முதல்வரின் நாடகத்தை எப்படி மக்கள் ஏற்றுக்கொள்ள முடியும்.

வளர்ச்சியின் அடையாள சின்னமான இந்தியாவின் தொழில்நுட்பத்தில் பாம்பன் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அதேபோல அன்றைக்கு கிட்டத்தட்ட ரூ.8300 கோடிக்கான திட்டங்கள் தமிழ்நாட்டில் தொடங்கி வைக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியை புறக்கணிக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இ-பாஸ் நடைமுறையால் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் பாதிக்கப்படுவதாக வணிகர் சங்கத்தினர் சந்தித்து மனு அளித்துள்ளனர். இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. எனவே, சட்டரீதியாக அனைத்து உதவிகளையும் செய்ய தயார்.
இதையும் படிங்க: பாஜக தயவுக்காக மக்களிடமிருந்து விலகி நிற்கும் அதிமுக.. அதிமுகவை எகிறி அடிக்கும் திருமாவளவன்

வக்பு வாரிய சட்ட திருத்தத்தால், வாரியத்தை மேலாண்மை செய்யவும் நடைமுறைபடுத்தவும் எளிதாக உள்ளது. இச்சட்டத் திருத்தத்தை இஸ்லாமியர்கள் ஏற்கொண்டு, வரவேற்றுள்ளனர்'' என்று எல். முருகன் கூறினார். தமிழக ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் எதிராக வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
இதையும் படிங்க: ஆளுநரின் மக்கள் விரோத செயல்பாடு.. பாஜகவுக்கு சவுக்கடி.. உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் செல்வபெருந்தகை!