பொங்கல் திருநாளையொட்டி அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வினியோகம் ரேஷன் கடைகளில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த முறை பரிசுத் தொகுப்புடன் ரொக்கம் தரப்படவில்லை. அதனால், ரேஷன் கடைகளில் கூட்டம் டல்லாக இருக்கிறது. இந்த சூழலில் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் வந்த கதையையும், அதில் ரொக்கமும் சேர்ந்த கதையைப் பற்றி ரீவைண்டிங் செய்வோம்.
இதையும் படிங்க: ரேஷன் கடையில் பொங்கல் பரிசு.. கர்பிணிகள் முதியவர்களுக்கு முன்னுரிமை ..அசத்தும் அரியலூர் ..!
2009இல் பொங்கல் திருநாளுக்கு முன்பாகத்தான் முதன் முதலாகப் பொங்கல் பரிசு பை திட்டத்தை அன்றைய முதல்வர் கருணாநிதி தொடங்கினார். சத்துணவுத் திட்டம் போல இதுவும் ஒரு கவர்ச்சிக்கரமான திட்டமாக மாறும் என்பதை அன்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. இத்திட்டம் முதன் முறையாகத் தொடங்கப்பட்டபோது 2009 ஏப்ரலில் நாடாளுமன்றத் தேர்தல் வர இருந்தது. அதோடு 2009 ஜனவரி 9-இல் புகழ்பெற்ற திருமங்கலம் இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்திட்டத்தின் பின்னணியில் இதையும் சேர்த்துக்கொள்ளலாம்.

திருமங்கலம் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இத்திட்டம் பிரதானமாகப் பேசப்பட்டது. திருமங்கலத்தில் கருணாநிதி பங்கேற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய அன்றைய காங்கிரஸ் எம்.எல்.ஏ. பீட்டர் அல்போன்ஸ், “இந்தக் கூட்டத்துக்கு வரும் முன்பு வீட்டில் மணக்க மணக்க சர்க்கரை பொங்கலை சாப்பிட்டு வந்தேன்” என்று இத்திட்டத்தைப் பற்றி பேசிவிட்டுதான் மற்ற விஷயங்களுக்கே சென்றார்.
அப்போது அரை கிலோ பச்சரிசி, அரை கிலோ வெல்லம், பாசி பருப்பு, முந்திரி, திராட்சி 20 கிராம் என்ற அளவில்தான் திட்டம் தொடங்கப்பட்டது. அப்போது இத்திட்டத்துக்கு ஆன மொத்த செலவு ரூ.80 கோடி. இத்திட்டம் திமுக ஆட்சியில் இருந்த 2011 பொங்கல் வரை செயல்படுத்தப்பட்டது. 2011 அதிமுக ஆட்சி வந்த பிறகு 2012-ஆம் ஆண்டில் பொங்கல் பரிசு பை எதுவும் வழங்கப்படவில்லை. திமுக ஆட்சியில் வந்த பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டதைப் போல, இதுவும் கிடப்பில் சென்றது.
ஆனால், 2013இல் பொங்கல் திருநாளுக்கு பொங்கல் பரிசு பை திட்டத்தை மீண்டும் அறிவித்து ஆச்சரியமூட்டினார் ஜெயலலிதா. அரை கிலோவாக இருந்த பச்சரிசி, சர்க்கரை 1 கிலோவாக உயர்த்தப்பட்டது. முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்புடன் ரூ. 100 முதன் முறையாக ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது. அதாவது, சர்ச்சரை பொங்கலை செய்ய தேவைப்படும் இதர பொருட்களை வாங்க இந்தத் தொகை வழங்கப்பட்டது. 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் ஆண்டிலும் இத்திட்டம் தொடர்ந்தது.
ஆனால், 2015 பொங்கலுக்கு பரிசு பை வழங்கப்படவில்லை. 2014 செப்டம்பர் 27 அன்று ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறைக்கு சென்றதால், முதல்வர் பதவியை இழந்தார். முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் இருந்தார். அப்போது, அதிமுகவினர் எல்லோரும் துயரகரமான தருணத்தில் இருந்தனர். அதன் வெளிப்பாடாக 2015-இல் பொங்கல் பரிசு பை திட்டம் அறிவிக்கப்படவேயில்லை. ஆனால், 2015 மே மாதத்தில் ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார். 2016-இல் சட்டப்பேரவைத் தேர்தல் ஆண்டு. அந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் மீண்டும் அறிவிக்கப்பட்டது. அதோடு ரூ.100 ரொக்கமும் வழங்கப்பட்டது.

2016 டிசம்பரில் ஜெயலலிதா மறைந்த தருணத்திலும், முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் 2017-இல் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை அறிவித்தார். ஆனால், ரூ.100 ரொக்கம் வழங்கப்படவில்லை. இதன்பின்னர் முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி, 2018-இல் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை அறிவித்தார். அப்போதும் ரூ. 100 ரொக்கம் வழங்கப்படவில்லை. மீண்டும் 2019 பொங்கல் பண்டிகைக்குதான் பொங்கல் பரிசு தொகுப்போடு ரூ. 1000 ரொக்கத்தையும் அறிவித்து மக்களை திக்குமுக்காட வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், 2019-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலும் 22 தமிழக சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலும் நடைபெற்றது. அதற்காகத்தான் ரூ.1000 என்ற விமர்சனம் எழவும் இது வழிவகுத்தது.
2020-ஆம் ஆண்டிலும் பொங்கல் பரிசு தொகுப்பும், ரூ.1000 ரொக்கமும் வழங்கும் திட்டம் தொடர்ந்தது. 2019 டிசம்பர் இறுதியில் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தை தொடர நீதிமன்றம் வரை சென்று தடை வாங்கப்பட்டது. தேர்தல் முடிவு ஜனவரி 2-இல் வெளியான பிறகுதான் இத்திட்டத்தை தொடங்கி வைக்க அதிமுக அரசால் முடிந்தது.
2021-ஆம் ஆண்டில் முன் எப்போதும் இல்லாத அளவில் பொங்கல் பரிசு தொகுப்போடு ரூ.2500 ரொக்கமும் அறிவித்து மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் எடப்பாடி பழனிச்சாமி. 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக இவ்வளவு பெரியத் தொகை வழங்கப்படுவதாகக் குற்றச்சாட்டுக்கும் விமர்சனத்துக்கும் அது வழிவகுத்தது. அதற்கு முன்பு ரூ.1000 வழங்கிய எடப்பாடி பழனிச்சாமி அரசு, ரூ.2500 வழங்கியதில் தேர்தல் பின்னணி இல்லை என்பதை அதிமுகவினராலேயே மறுக்க முடியாது என்பதே உண்மை.

அதனைத் தொடர்ந்து 2022 பொங்கல் திருநாளுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒன்றரை மாதத்துக்கு முன்பே அறிவித்தார், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் அல்லது பொங்கலுக்கு முன்பாக நடைபெறும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் திமுக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை அறிவித்தது.
2024இல் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 இல்லை என்றுதான் தமிழக அரசு அறிவித்தது. ஆனால், எதிர்க்கட்சிகள் உள்பட அனைத்துக் கட்சிகளின் வலியுறுத்தலுக்கு மத்தியில் ரூ.1000 ரொக்கம் அறிவிக்கப்பட்டது. 2024இல் மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால், திமுக அரசு தன் முடிவை மாற்றிக் கொண்டதில் வியப்பில்லை. இந்த முறை வலியுறுத்தல்கள் இருந்தாலும் திமுக அரசு செவி சாய்க்கவில்லை. அடுத்த ஆண்டு தேர்தல் ஆண்டு. ஆக, 2026இல் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கூடுதல் ரொக்கம் கிடைத்தாலும் ஆச்சரியமில்லை.

பொங்கல் பரிசு பை அல்லது பொங்கல் பரிசு தொகுப்பு எனப் பெயர்களில் அழைக்கப்பட்ட இத்திட்டம், திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டாலும் ரொக்கம் வழங்குவதை அறிமுகப்படுத்தியது அதிமுக அரசுதான். தேர்தலை மனதில் கொண்டு ரொக்கம் வழங்குவதை செயல்படுத்தினாலும் ஏழை, எளிய மக்களுக்கு அது பெரும் உதவியாக இருந்ததையும் மறக்கவோ மறைக்கவோ முடியாது.
இதையும் படிங்க: தேர்தல் இல்ல ..பொங்கல் ரொக்கப் பரிசும் இல்ல .. அரசை போட்டுத்தாக்கிய ஜான்பாண்டியன்!