வேங்கை வயல் விவகாரத்தில் தமிழக காவல் துறையினர் தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிகை கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "ஒரு விசாரணையின் முடிவுகள் கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றன எனில், அவற்றை மறு விசாரணைக்கு உட்படுத்துவதில் எவ்விதத் தவறும் இல்லை. வேங்கை வயல் விவகாரத்தில், குற்றம் செய்தவர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் குறித்துப் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன. மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிபிசிஐடி ஏற்கெனவே விசாரணை நடத்தி, கால தாமதமாக விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. ஒன்றிய அரசின் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால் அது மேலும் கால தாமதத்தையே ஏற்படுத்தும். இது வேங்கை வயல் மக்களுக்கு விரைவாக நீதியைப் பெற்றுத் தராது.
வேங்கை வயல் விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். வருங்காலங்களில் இது போன்ற ஒரு கொடுஞ்செயல் நிகழாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். ஆகவே, கடும் கண்டனத்திற்கு உரிய, மனிதத் தன்மையற்ற செயலான வேங்கை வயல் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழுவை நியமித்து விசாரணை நடத்தி, உண்மையானக் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்" என அறிக்கையில் விஜய் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திமுக ஒரு நாடக கம்பெனி.. கருணாநியை மிஞ்சும் திரைக்கதை.. திமுக அரசை டாராகக் கிழித்த அண்ணாமலை!