சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் அரக்கோணம் மார்க்கமாக மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த மின்சார ரயில் கொரட்டூர் ரயில் நிலையம் வந்தபோது நடைமேடையில் நின்று இருந்த வாலிபர்கள் சிலர், மின்சார ரயிலில் பயணித்த மாநில கல்லூரி மாணவர்கள் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்க தொடங்கினர். இதனால், அந்த பகுதி முழுக்கவே போர்க்களம் போல் காட்சியளித்தது. இது ரயிலில் பயணித்த பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. ரயிலின் கதவை மூடியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. ரயிலிலும், நடைமேடையிலும் இருந்த பயணிகள் இந்த சம்பவத்தை தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். ரயில் கிளம்பியதும், தாக்குதல் நடத்திய வாலிபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இந்த தாக்குதல் வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து பெரம்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், பெரம்பூர் இருப்பு பாதை இன்ஸ்பெக்டர் பத்மநாபன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கிருந்து சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் ரயில் நிலையத்தில் பயணிகள் எடுத்த வீடியோக்களின் ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்டது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் என்பது தெரிந்தது. இதுதொடர்பாக, திருவள்ளூர் ஒன்றிக்குப்பம் பகுதியை சேர்ந்த பாலா (எ) பரந்தாமன் (வயது 19), திருவள்ளூர் பகுதியை சேர்ந்த உமாபதி (வயது 19), ஆவடி கோவிந்தராஜபுரம் பகுதியை சேர்ந்த சஞ்சய் (வயது 21), திருவள்ளூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது 19) மேலும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் 4 பேர் உள்பட 9 பேரை நேற்று கைது செய்தனர்.
இதையும் படிங்க: டாக்டர்கள் செய்யக்கூடிய செயலா இது? மருத்துவக் கல்லூரி விடுதியில் கஞ்சா.. பயிற்சி மருத்துவர்கள் மூவர் கைது!

இவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் ரயில்வே எஸ்பி ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் பெரம்பூர் இருப்புப் பாதை ரயில் நிலையத்திற்கு வந்து மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லாவண்யா என்ற பெண் ஐடியில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் தான் கெத்து, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் வேஸ்ட் என்ற ரீதியில் பதிவு செய்து இருந்ததாக மாணவர்கள் கூறினார். இந்த போஸ்டை கணட் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், மாநிலக் கல்லூரி மாணவர்கள் தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்கள் என நினைத்து தாக்குதலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தனர். மேலும் விசாரணையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் குறிப்பிட்ட லாவண்யா என்ற பெயர் கொண்ட அந்த ஐடி போலியானது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட 4 சிறுவர்கள் உட்பட 9 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த பெரம்பூர் இருப்புப் பாதை ரயில்வே போலீசார், சிறுவர்களை கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். மற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த தாக்குதலில் மேலும் சம்பந்தப்பட்ட சிலரையும் போலீசார் தேடி வருகின்றனர். அது மட்டும் அல்லாமல், பொது இடங்களில் மாணவர்கள் அடிக்கடி மோதிக்கொள்வதை தடுக்கும் வகையில், ரயில்வே எஸ்பி ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் நேற்று பச்சையப்பன் கல்லூரிக்கு சென்று அறிவுரை வழங்கினர்.

அப்போதுதான் வகுப்புகளை புறக்கணித்து அந்த மாணவர்கள் இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. எனவே, சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கல்லூரிக்கு பரிந்துரை செய்ய உள்ளதாகவும் எஸ்பி ஈஸ்வரன் தெரிவித்தார். இந்நிலையில் வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பச்சையப்பன் கல்லூரிக்கு காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது. பச்சையப்பன் கல்லூரி நிர்வாகத்திற்கு பெரம்பூர் ரயில்வே போலீசார் கடிதம் அனுப்பி உள்ளனர்.
இதையும் படிங்க: மக்களே உஷார்… தமிழகத்தில் கொட்டித்தீர்க்க போகும் கனமழை!!