தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள இளம்பவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி காளியம்மாள். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக காளியம்மாள் தனது கணவரை விட்டு பிரிந்து தனது பிள்ளைகளுடன் பரமக்குடியில் வாழ்ந்து வந்துள்ளார்.
காளியம்மாளின் 17 வயது மகளுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்று இளைஞரும் சிறுவயதிலிருந்தே நண்பர்களாக பழகி வந்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நட்பு காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இவர்களின் காதல் வீட்டிற்கு தெரிந்ததும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இதையடுத்து அந்த 17 வயது சிறுமி காதல் வீட்டிற்கு தெரிந்து விட்டதால் பிரச்சனை எழுந்துள்ளது எனவே இருவரும் நண்பர்களாக பிரிந்து விடுவோம் என்று தெரிவித்ததாகவும், ஆனால் சந்தோஷ் விடாமல் தொடர்ந்து அந்த 17 வயது சிறுமிக்கு தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டு 02.08.2024 சந்தோஷ் மீது 17 வயது சிறுமியின் தாயார் காளியம்மாள் பரமக்குடி காவல் நிலையத்தில் போனில் அசிங்கமாக பேசி மிரட்டியதாக புகார் கொடுத்துள்ளார். இதனை விசாரித்த காவல்துறையினர் இருதரப்பினையும் அழைத்து விசாரணை நடத்தி எழுதி வாங்கி வழக்கினை முடித்ததாக தெரிகிறது
இதையும் படிங்க: டிரம்ப் செய்த மோசமான செயல்... தவிக்கும் பிள்ளைகள்!!

தொடர்ந்து சந்தோஷினால் பிரச்சனை வந்ததால் காளியம்மாள் தனது 17 வயது மகளை எட்டையாபுரம் அருகே கீழ நம்பி புரத்தில் இருக்கும் தனது தாயார் முனியம்மாள் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார். 17வயது சிறுமி தனது பாட்டி வீட்டில் இருந்த நிலையில் கடந்த 23ந்தேதி சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்டு, அருகில் இருந்தவர்கள் உள்ளே சென்று பார்த்த போது தீ பற்றி எரிந்து 17 வயது சிறுமி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் எட்டையாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது இரண்டு இளைஞர்கள் வந்து சென்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயதில் சிறுமி போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் முத்தையா இருவரும் வந்து தன்னிடம் பேச வேண்டும் என்று தொந்தரவு கொடுத்ததாகவும், தான் அதற்கு மறுப்பு தெரிவித்ததும் மண்ணெண்ணெய் வைத்த ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது .

அவர் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் போலீசார் சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் முத்தையா இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். சிகிச்சை பெற்று வரும் 17 வயது சிறுமி கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் இருவரையும் கைது செய்துள்ளதாகவும், உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சொத்தை எழுதி தராத பாட்டி.. கல்லால் அடித்து கொன்ற பேரன்.. பூர்வீக வீட்டால் வந்த பிரச்னை..!