தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தலாமா? என்பது குறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசிடமிருந்து எந்தக் கோரிக்கையும் வரவில்லை என்று மத்திய அரசு கூறியிருக்கிறது. மத்திய அரசிடமிருந்து எந்த விளக்கமும் பெறாமல் தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த தங்களுக்கு அதிகாரமில்லை என்று கூறி வருவதன் மூலம் திராவிட மாடல் அரசுக்கு சமூகநீதியில் எந்த அக்கறையும் இல்லை என்பது அம்பலமாகியுள்ளதாக அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதில் மத்திய அரசுக்கு ஏதேனும் ஆட்சேபனை உள்ளதா? என நாடாளுமன்ற மக்களவையில் நான் வினா எழுப்பியிருந்தேன். அதற்கு விடையளித்த மத்திய சமூகநீதித்துறை இணையமைச்சர் பி.எல் வர்மா, தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது குறித்து மாநில அரசிடமிருந்து மத்திய அரசுக்கு எந்தத் தகவலும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வெட்டிக்கொலை.. சட்டம் - ஒழுங்கு எங்கே? என அன்புமணி கேள்வி..!

2008-ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால், அந்தக் கோரிக்கையை ஏற்க மறுக்கும் தமிழக அரசு, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று சில தருணங்களிலும், அவ்வாறு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப் பட்டால் அதன் விவரங்கள் ஏற்கப்படுமா? என்பது தெரியாது என சில தருணங்களிலும் கூறி வருகிறது.

தமிழ்நாடு அரசு எந்த அடிப்படையில் இப்படி ஒரு நிலைப்பாட்டுக்கு வந்தது என்பதைத் தான் புரிந்து கொள்ள முடியவில்லை. 2008-ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டம் மத்திய அரசால் இயற்றப்பட்ட சட்டம் ஆகும். அந்த சட்டத்தின்படி எந்த வகையான புள்ளிவிவரங்களையும் சேகரிக்க முடியும்; அதனடிப்படையில் முடிவுகளை எடுக்க முடியும் என்று அந்த சட்டத்தில் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. அதையும் கடந்து தமிழக அரசுக்கு ஏதேனும் ஐயங்கள் இருந்தால் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுப் பெறலாம்.
ஆனால், மத்திய அரசிடம் அவ்வாறு எந்த விளக்கத்தையுமே பெறாமல், தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த முடியாது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும், மீண்டும் கூறி வருகிறார். 2008-ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த முடியாது என்று அவருக்கு யார் கூறினார்? எனத் தெரியவில்லை.

மத்திய அரசிடமிருந்து எந்த விளக்கமும் பெறாமல் தமிழக அரசுக்கு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் இல்லை என்று கூறுவதன் மூலம் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை நடத்தி, மக்களுக்கு சமூகநீதி வழங்க வேண்டும் என்ற அக்கறையோ, விருப்பமோ இல்லை என்பது தெளிவாகிறது; மத்திய அரசின் மீது பழியைப் போட்டு மக்களை ஏமாற்றலாம் என்பது தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திட்டமாக இருக்கிறது. திமுக அரசின் சமூகநீதி முகமூடி கிழிந்து விட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தமிழக அரசு தூங்குவது போல் நடிக்கிறது.. சாதிவாரி கணக்கெடுப்பை சுட்டிக்காட்டி ராமதாஸ் விமர்சனம்..!