டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் கலந்து கொள்ள புறப்பட்ட தமிழக பாஜகவின் மூத்தத் தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தன்னை கைது செய்ய வாரண்ட் இருக்கிறதா என்று போலீசாருடன் தமிழிசை சௌந்தரராஜன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது போலீசாருக்கும், தமிழக பாஜக தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது..

டாஸ்மாக் அலுவலகத்தில் கடந்த வாரம் சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறையினர், மதுபானம் கொள்முதல், விநியோகம், பணியிட மாறுதல் ஆகியவற்றில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்று இருக்க வாய்ப்புள்ளதாக கூறியது. இதற்கான சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முயற்சியில் அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளது.
இதையும் படிங்க: டாஸ்மாக் முறைகேடு.. திமுக வசமாக சிக்கிக் கொண்டுவிட்டது.. குஷியில் பாஜக..!!
இதனிடையே டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறி அதன் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார். எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் திரண்டு அங்கிருந்து பேரணியாக எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராஜன் மாளிகையை நோக்கி சென்று டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடுவதாக திட்டம் வகுக்கப்பட்டிருந்தது.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், சாலிகிராமத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் இருந்து புறப்பட முயன்றார். அங்கு ஏராளமான பாஜக தொண்டர்களும் குவிந்து இருந்தனர். அப்போது அங்கு வந்த போலீசார் தமிழிசை சௌந்தரராஜன் மட்டும் தனியாக செல்லலாம் என்றும் தொண்டர்கள் உடன் செல்லக்கூடாது என்றும் கூறினர். இதற்கு மறுப்புத் தெரிவித்து தமிழிசை போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கூடியிருந்த தொண்டர்களும் தமிழக அரசுக்கு எதிராகவும், காவல்துறைக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர். டாஸ்மாக் ஸ்டாலின் ஒழிக என்று அவர்கள் கோஷமிட்டனர்.

பிறகு தமிழிசை சௌந்தரராஜனை மட்டும் போலீசார் தங்கள் வாகனத்தில் ஏற்றினர். அப்போது வாகனத்தில் இருந்தபடி ஊடகத்தினரிடம் தமிழிசை பேசினார். எழும்பூருக்கு அழைத்துச் செல்வதாக போலீசார் கூறியுள்ளனர், ஒருவேளை அங்கு அழைத்து செல்லப்படாவிட்டால் அடுத்து என்ன என்று எனக்குத் தெரியவில்லை, டாஸ்மாக் ஊழலை வெளிக்கொண்டு வருவேன் என அவர் ஆவேசமாக குறிப்பிட்டார்.

இதேபோன்று பாஜக மாநில துணைத்தலைவர் சக்கரவர்த்தி தனது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டு அண்ணாநகர் அழைத்துச் செல்லப்பட்டார். வி.பி.துரைசாமி போன்ற மூத்த நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சிறுபான்மையினருக்கு எங்களைப்போல இடஒதுக்கீடு தரமுடியுமா? பாஜக-வுக்கு டி.கே.சி சவால்..!