நடிகை விஜயலட்சுமி தாக்கல் வழக்கில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் விசாரணை நடத்தலாம் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய இழப்பீடு வழங்குவது குறித்து இருதரப்பும் பேசி முடிவு எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும் அவரால் தான் கருக்கலைப்பு செய்ய நேரிட்டதாகவும் நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு குற்றஞ்சாட்டி இருந்தார். இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக மீண்டும் சூடுபிடித்தது. 12 வாரங்களுக்குள் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என்ற கடந்த 17-ந் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி வளசரவாக்கம் போலீசார் சீமானுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். அந்த சம்மன் சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட விவகாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு கடந்த 28-ந் தேதி இரவு வளசரவாக்கம் காவல்நிலையத்தில் சீமான் ஆஜரானார்.

இந்நிலையில் இந்த விசாரணைக்கு தடைகோரி உச்சநீதிமன்றத்தில் சீமான் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக குற்றஞ்சாடினார். திமுக ஆட்சி அமைந்த பிறகு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக விசாரணை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் வாதிட்டார். 2011-ம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி புகார் அளித்த நிலையில், இடையில் மூன்று முறை அவரே அதனை வாபஸ் பெற்றதையும் வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: #BREAKING விஜயலட்சுமி வழக்கில் ஓய்ந்தது தொல்லை... சீமான் மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு...!
நடிகையால் தான்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சமூக வலைதளங்களிலும், பொது வாழ்க்கையிலும் தன்னைப் பற்றி அவதூறான கருத்துகளை அவர் தொடர்ந்து பேசி வந்ததாகவும் சீமான் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், நடிகை தொடர்ந்த வழக்கில் சீமானிடம் விசாரணை மேற்கொள்வதற்கு அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தனர். 12 ஆண்டுகளுக்குப் பிறகு எதற்காக இந்த வழக்கு மீண்டும் எடுக்கப்பட்டது என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். இதுமட்டுமல்லாது எதிர்மனுதாரரான நடிகை விஜயலட்சுமி, இதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் இடைப்பட்ட காலத்திற்குள் இருதரப்பினரும் கலந்து பேசி பாதிக்கப்பட்ட நடிகைக்கு இழப்பீடு வழங்குவது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: அடுத்த தலைவலியில் சீமான் ... நடிகை சொன்ன பகீர் தகவல்!!