திமுக அரசுக்கும் பாஜகவிற்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. மத்திய பாஜக அரசின் கொள்கைகளை ஏற்க திமுக அரசு மறுப்பதும், திமுகவை எதிர்த்து தமிழகத்தில் பாஜக போராடுவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில் பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிரதமர் மோடி, அண்ணாமலை படத்தை கழிவறையில் ஒட்டி திமுகவினர் செய்யும் அரசியல் கீழ்த்தரமானது என்றும் தமிழகத்தில் நடந்த ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக் ஊழலை அமலாக்கத்துறை அம்பலப்படுத்தியதை தொடர்ந்து தமிழகம் முழுக்க ஜனநாயக வழியில் பாஜகவினர் நடத்திய போராட்டத்தை திமுக அரசு காவல்துறையை கொண்டு, சட்டத்துக்கு புறம்பாக பல்வேறு அராஜக வழியில், அடக்க முயற்சித்து தோற்றுவிட்டது எனவும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: திமுக, காங்., எம்.எல்.ஏக்கள் அமளி.. குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டதால் களேபரமான புதுவை சட்டசபை..!

டாஸ்மாக் ஊழலை தட்டி கேட்ட பாஜகவினரை, கொடுமைப்படுத்தும் காவல்துறையை கண்டித்தும், காவல்துறையின் பொறுப்பு அமைச்சராக உள்ள தமிழக முதல்வர் ஸ்டாலினை கண்டித்தும் தமிழகம் முழுக்க டாஸ்மாக் கடைகளின் வாசலில் முதல்வரின் படத்தை ஒட்டும் போராட்டத்தை மகளிர் அணியினர் நடத்தினார்கள் என்று கூறியுள்ளார்.

காவல்துறையின் கடும் கெடுபிடிகளிலும் மனம் தளராமல் ஊழலை எதிர்த்து பாஜக தொடர்ந்து போராடி வருகிறது என்று கூறி அவர், தமிழகத்துக்கு பல லட்சம் கோடி திட்டங்களை அளித்து தமிழகத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும் பிரதமர் மோடி மற்றும் தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு குரல் கொடுத்து, மக்களின் உரிமைகளுக்காக பாடுபட்டு அரசியல் சேவை செய்யும் அண்ணாமலை ஆகியோர் புகைப்படத்தை ஆண்கள் கழிவறையில் ஒட்டி கேவலப்படுத்துவது தான் பேரறிஞர் அண்ணா உங்களுக்கு கற்றுக் கொடுத்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அரசியலா என கேள்வி எழுப்பினார் . மேலும், வெகு விரைவில் சென்னை மாநகராட்சி கழிவறை ஒப்பந்த ஊழல் வெளிச்சத்துக்கு வரவுள்ளது என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'பீடை பாபு...' உன்னை சிறையில் வைக்காமல் இந்த சனி ஓயாது.. சேகர் பாபுவை சிதைத்த ஹெச். ராஜா.!