புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா கோலாகலமாக நடைபெறும். இவ்விழாவில் மதுரை மட்டுமல்லாது தென் மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். அதன்படி இந்தாண்டு சித்திரை திருவிழா ஏப்ரல் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
குறிப்பாக வாஸ்து சாந்தியுடன் தொடங்கும் சித்திரை திருவிழா வரும் மே 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கொடியேற்றம் செய்யப்பட்ட நாளிலிருந்து கிட்டத்தட்ட ஒரு மாதங்களுக்கு மதுரை மாவட்டமே விழா கோலம் பூண்டு காட்சியளிக்கும்.

வரும் ஏப்ரல் 29ம் தேதி முதல், தொடர்ந்து 15 நாட்கள் நடைபெற உள்ள திருவிழாவில், ஏப்ரல் 30 ஆம் தேதி பூதம் மற்றும் அன்ன வாகனத்தில் சுவாமியும், அம்மனும் திருவீதி உலா நடைபெறுகிறது. மே 1ஆம் தேதி கைலாச பர்வதம் மற்றும் காமதேனு வாகன உலாவும், மே 2 ஆம் தேதி தங்கப்பள்ளத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருள்கின்றனர். மே 3ஆம் தேதி தங்க குதிரை வாகன உலா மற்றும் வேடர் பறி லீலை நிகழ்வு நடைபெறுகிறது.
இதையும் படிங்க: போதையில் தகராறு.. இளைஞர் கொடூரமாக வெட்டிக்கொலை.. ஓய்வு பெற்ற தலைமைக் காவலர் சரண்..!

மே 4 ஆம் தேதி, ரிஷப வாகன உலா மற்றும் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை யும், நந்திகேஸ்வரர் மற்றும் யாளி உலா மே 5 ஆம் தேதியும் நடைபெறுகிறது. மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் மற்றும் ஊடல் உற்சவம் வெள்ளி சிம்மாசன உலா மே 6 ஆம் தேதி நடைபெறும். மே 7ஆம் தேதி திக் விஜயமும், மே 8 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நிகழ்வு நடைபெறுகிறது.

சித்திரைப் பெரும் திருவிழாவின் 11ஆம் நாள் திருநாளான மே 9 ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. இதன் தொடர்ச்சியாக மே 11 ஆம் தேதி கள்ளழகர் எதிர்சேவை நிகழ்ச்சியும், மே 12ஆம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்க தமிழகம் முழுவதிலிருந்தும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்பதால், மக்களின் நலன் கருதி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மே 12ஆம் தேதியை உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆட்டோமொபைல் நிறுவன உரிமையாளர் கடத்தல்..? 5 நாட்களாகியும் மீட்க முடியாத அவலம்.. அச்சத்தில் குடும்பம்..!