வேலூர் மாவட்டம் காட்டுக்கொல்லை கிராமத்தில் 150 குடும்பங்களுக்கு வக்பு வாரியம் வரி கேட்டு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் சர்ச்சையாகி இருக்கிறது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியத்தில் இறைவன்காடு ஊராட்சிக்கு உட்பட்ட காட்டுக்கொல்லை என்கிற கிராமத்தில் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் 150 குடும்பத்தினர் வசிக்கும் வீடுகள் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்று கூறி, வரி கேட்டு வக்பு வாரியம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த விவகாரம் தற்போது சர்ச்சை ஆகியிருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரில், “இங்கு 4 தலைமுறைகளாக வசித்து வருகிறோம். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளைச் செலுத்தி வருகிறோம். தற்போது இந்த இடம் வக்பு சொத்து என்றும், அதற்குரிய வரி கட்டாவிட்டால் வீடுகள் அகற்றப்படும் என்றும் நோட்டீஸ் கொடுத்துள்ளார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தெரிய வந்ததும், இந்து முன்னனியும் களத்தில் இறங்கியது. இந்து முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மனு அளிக்கப்பட்டது. அதில், "கீழண்டையில் உள்ள நவாப் மசூதி மற்றும் ஹசரத் சையத் அலி சுல்தான் ஷா தர்கா சார்பில் வக்பு போர்டுக்கு வரி கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. எனவே, அந்தக் குடும்பங்களுக்கே உடனே பட்டா வழங்க வேண்டும்" என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தர்காவின் முத்தவல்லி சையத் சதாம் தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர். “காட்டுக்கொல்லையில் 5 ஏக்கருக்கு மேல் வக்புக்கு சொந்தமான நிலம் உள்ளது. 1954ஆம் ஆண்டிலிருந்தே அதற்கான ஆவணங்கள் உள்ளன. வக்பு இடத்தில் உள்ளவர்களை முறைப்படுத்தவே நாங்கள் நோட்டீஸ் கொடுத்துள்ளோம். அந்த இடத்தை காலி செய்யவோ, இடிப்போம் என்றோ நாங்கள் சொல்லவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வி.ஆர்.சுப்புலட்சுமி உத்தரவின்பேரில், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களும் தர்கா தரப்பினர் அளிக்கும் ஆவணங்களைப் பரிசீலித்த பின்னரே, உரிய முடிவெடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இது வக்ஃபு வாரிய சொத்து... ஊரை காலி செய்யுங்கள்: தமிழக கிராமத்துக்கு வந்த நோட்டீஸால் பரபரப்பு..!

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,"காட்டுக்கொல்லையில் நடந்த நிகழ்வு, வக்பு சட்டத் திருத்தத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது. பல தலைமுறைகளாக வசித்துவரும் குடும்பங்களை சட்ட விரோதமாக அகற்ற முற்படுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால், அங்குசென்று போராட்டத்தை முன்னெடுப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: “டெல்லிக்கே ராஜான்னாலும், தமிழ்நாட்டுக்கு பிச்சைக்காரன் தான்”... பாஜகவை வறுத்தெடுத்த திமுக அமைச்சர்!