சென்னை கோயம்பேட்டில் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்ட தகவலை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டேன். அது அந்த 2 கட்சிகளும் சேர்ந்து எடுத்த முடிவு. அதுபற்றி நாங்கள் எந்தக் கருத்தும் கூற முடியாது. தேமுதிகவைப் பொறுத்தவரை ஏப்ரல் 30ஆம் தேதி செயற்குழு-பொதுக்குழுக் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். தேமுதிகவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றப் பணிகளில் மட்டுமே நாங்கள் முழு மூச்சாக ஈடுபட்டு வருகிறோம்.

செயற்குழு-பொதுக்குழு நடைபெற்று முடிந்தவுடன் யாருக்கு எல்லாம் பதவிகள் என்று அறிவிக்கப்படும். 6 மாதங்கள் கட்சியை வலுப்படுத்தும் பணிகளை மட்டுமே மேற்கொள்ள உள்ளோம். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் உள்ளது. அதனால் நாங்கள் இந்த முறை கூட்டணி விவகாரத்தில் மிகவும் யோசித்து, நிதானமாகத்தான் முடிவு எடுப்போம். மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில்தான் இருந்தோம். தற்போது கூட்டணி குறித்து யாரிடமும் எதுவும் பேசவில்லை, அதிகாரப்பூர்வமாக நாங்கள் தெரிவிப்போம். எனவே, தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்.

பாஜக மாநில தலைவர் மாற்றம் என்பது அந்தக் கட்சியின் முடிவு. அதில் எங்களுடைய கருத்து என்று எதுவும் இல்லை. பாஜக புதிய தலைவருக்கு தேமுதிக சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், பெண்களைப் பற்றி பொதுவெளியில் அமைச்சர் பொன்முடி தவறாக சித்தரித்து பேசியுள்ளார். இந்த விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின் உறுதியான நடவடிக்கை எடுத்துள்ளார்' என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: புதிய பாம்பன் பாலத்துக்கு அப்துல் கலாம் பெயர் ஏன் வைக்கக் கூடாது.? மாஸ் ஐடியா கொடுத்த பிரேமலதா!!
இதையும் படிங்க: சிறப்பு.. மிகச் சிறப்பு.. மு.க. ஸ்டாலின் அரசுக்கு பிரேமலதா விஜயகாந்த் மீண்டும் பாராட்டு பத்திரம்.!!