''அரசியல் நாகரீகம் என்பது திமுக கற்ற அரிச்சுவடி. மக்கள் பிரதிநிதிகளை எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் என்றாலும் எப்படி மரியாதையுடன் நடத்த வேண்டும் என்பதில் முதல்வர் ஒரு பல்கலைக்கழகம். நயினார் நாகேந்திரன் கூச்சப்படும்அளவுக்கு நயத்தக்க நாகரீகம்'' என புகழ்கிறார்கள் திமுகவினர். அந்த அளவுக்கு நேற்று நடந்த விழாவில் நயினார் நாகேந்திரனை ஸ்டாலின் வழி நடத்தியது அனைவராலும் கவனிக்க வைத்தது.
திருநெல்வேலியில் நடந்த அரசு நிகழ்ச்சியில் ‘நம்முடைய நயினார் நாகேந்திரன்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிமையோடு பேசியதுதான் தி.மு.க.வினரையே வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.சோலார் பேனல் உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்ட மண் அள்ளிக் கொட்டியபோதும் நயினார் நாகேந்திரனை அழைத்த மு.க.ஸ்டாலின் தன் அருகில் நிற்கவைத்து மண் அள்ளிக் கொட்ட வைத்ததை திமுக நிர்வாகிகளே வியப்பாக பார்த்தனர்.

மறுபுறம், மாநிலத் தலைவர் பதவியைப் பிடிக்க கமலாலயத்தில் அனல் தகிக்கிறது.நயினார் நாகேந்திரன், தமிழிசை, கே.டி.ராகவன், பொன்னார் என ஒரு கோஷ்டியே தலைவர் பதவிக்கு முட்டி மோதி வருகிறது. ஆனாலும், தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலையே நீடிப்பார் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மாணவியை நாசமாக்கிய பள்ளி ஆசிரியர்கள்... திமுக அரசை வெளுத்து வாங்கிய அண்ணாமலை!
இதனால், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் இடையே சுமூக உறவு இல்லை. இதன் வெளிப்பாடாக சில நாட்களுக்கு முன் நயினார் நாகேந்திரனை அண்ணாமலை கடுமையாக விமர்சித்திருந்தார். அதாவது, ‘நயினார் அண்ணனுக்கு ரெய்டு விடுவதற்கான அதிகாரம் இல்லை’ என கடுகடுத்தார் அண்ணாமலை! காரணம், நயினார் நாகேந்திரனுக்கு தலைவர் பதவி கிடைக்கவில்லை என்பதை உறுதி செய்த பின்னர்தான் அண்ணாமலை இந்த விமர்சனத்தை வைத்தார் என்கிறார்கள்.

அதுமட்டுமின்றி நயினார் நாகேந்திரன் மாற்றுக் கட்சிக்கு செல்லவும் வாய்ப்புகள் உள்ளதாக அவ்வப்போது சில தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏனென்றால் திருநெல்வேலியில் கட்சியையும் தாண்டி நயினார் நாகேந்திரனுக்கு இருக்கும் ஆதரவு அப்படி. பல்வேறு கட்சிகளில் இருந்தும் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருநெல்வேலியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் தரப்பில் எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதனையேற்று பாஜக எம்எல்ஏ-வான நயினார் நாகேந்திரன் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘கடந்த 2023ம் ஆண்டு நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான மழை காரணமாக பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்காக தமிழக அரசு தரப்பில் மத்திய அரசிடம் நிதி உதவி கோரப்பட்டது. அந்த நேரத்தில் இடைக்கால நிதியுதவியை கூட மத்திய அரசு செய்யவில்லை. நம்முடைய நயினார் நாகேந்திரன் கோபித்துக் கொள்ளக் கூடாது. அவருக்கும் உண்மை தெரியும். ஆனால் அவர் பேச மாட்டார். நீங்கள் பேசுங்கள் என்றுதான் எனக்கு அனுமதி கொடுப்பார்’’ என்று சமரசப்படுத்தினார்.

அதிமுகவில் இருந்த போது நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, அமைச்சராக செயல்பட்டவர். திமுக நிர்வாகிகளுடன் அவருக்கு நட்பு உள்ளது. தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே, ‘‘நம்முடைய நயினார் நாகேந்திரன்’’ என்று கூறி, வாஞ்சையோடு வழை நடத்தியது திமுகவினரிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், அவர் விரைவில் திமுகவுக்கு தாவுவாரோ என்கிற விவாதத்தை கிளப்பி உள்ளது. இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் பேசிய போது, பாஜக எம்எல்ஏ-வான நயினார் நாகேந்திரன் கோபித்து கொள்ளக் கூடாது என்று மேடையிலேயே சமாதானம் செய்த சம்பவம் பலரின் கவனத்தை திருப்பியுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தளவில் தி.மு.க., அ.தி.மு.க. இந்த இரண்டும்தான் ஆளும் கட்சிகளாக வரவாய்ப்பிருக்கிறது. அ.தி.மு.க. பிளவுபட்டுக் கிடக்கும் நிலையில், நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்கள் தி.மு.க.விற்கு அவரை செல்லுமாறு வற்புறுத்துகின்றனர். தி.மு.க. தலைமையும் நயினாருக்காக சிவப்புக் கம்பளம் விரித்து காத்திருப்பதும் உண்மைதான் என்றனர் அறிவாலய வட்டாரத்தினர். காரணம், நெல்லை தி.மு.க.வில் தலைவிரித்தாடுகிறது கோஷ்டி பூசல். நயினார் நாகேந்திரனைப் போல் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் நபர் இருந்தால், கோஷ்டிப் பூசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என நினைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதனால்தான் இந்த திடீர் பாசம் என்கிறார்கள் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள்.
இதையும் படிங்க: திமுகன்னா ரெண்டு கொம்பு முளைச்சிருக்கா..? கள்ளச்சாராய விவகாரத்தில் ஸ்டாலின் அரசை வசைபாடும் எடப்பாடி பழனிச்சாமி.!