கஞ்சா போன்ற போதைப்பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் முற்றிலுமாக சிதைந்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களே போதை பழக்கத்திற்கு அடிமையானதாக வரும் செய்திகள் நெஞ்சை உறைய வைக்கிறது. இதன் காரணமாக சென்னை மட்டுமல்லாதது தமிழகம் முழுவதும் கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சிலர் வெளி மாநிலங்களில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனையில் ஈடுபடுவதால், ரயில்வே போலீசாரின் உதவியுடன் தமிழகம் போலீசார் ரயில் நிலையங்கள், மாநில எல்லைகளில் கஞ்சா ஒழிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் கஞ்சா கடத்தல், கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்யவும் போதைப் பொருள்களை பதுக்கி விற்பனை செய்பவர்களையும் களைய காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, போலீசாரின் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக சென்னை முழுவதும், கஞ்சா கடத்தல்காரர்கள், வட மாநில தொழிலாளர்கள் உள்பட போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட பல்வேறு தரப்பினர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதனிடையே சென்னை மருத்துவக்கல்லூரியில் மாணவர்கள் சிலர் போதைப்பொருள்களை பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையும் படிங்க: மக்களே உஷார்… தமிழகத்தில் கொட்டித்தீர்க்க போகும் கனமழை!!

இதுதொடர்பாக, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணி ராஜனுக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதையடுத்து, தேரணி ராஜன், நேற்று மாணவர் விடுதியில் திடீர் சோதனை மேற்கொண்டார். அப்போது, அங்கு தங்கி இருந்த பயிற்சி மருத்துவ மாணவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தி வந்தது தேரணி ராஜன் கண்டுபிடித்தார்.உடனே இதுகுறித்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன், அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் உடனே களத்தில் இறங்கிய போலீசார் சென்னை அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதியில் அதிரடி ஆய்வில் இறங்கினர்.

அப்போது பயிற்சி மருத்துவர்கள் அறையில் உயர் தரத்திலான, 150 கிராம் கஞ்சாவும், வலி நிவாரணிக்காக மருத்துவ துறையில் பயன்படுத்தும் கேட்டமைன் மருந்துகள் கொண்ட 4 குப்பிகளை கைப்பற்றினர். மேலும் போதைப்பொருள்களை வைத்திருந்தது மற்றும் பயன்படுத்திய குற்றத்திற்காக பயிற்சி மருத்துவர்கள் தருண், ஜெயந்த், சஞ்சய் ரத்தினவேல் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சென்னை சின்னமலை பகுதியில் வசிக்கும் ரோட்னி ரோட்ரிகோ (வயது 25) என்பவர் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது தெரிந்தது. அவரை சுற்றி வளைத்து கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 1.25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பிபிஏ பட்டதாரியான ரோட்ரிகோ தனியார் டெலிவரி நிறுவனம் ஒன்றில் மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் பணியாற்றி வந்துள்ளார். குறுகிய காலத்தில் பணக்காரன் ஆக ஆசைப்பட்ட ரோட்ரிகோ நண்பர் ஒருவர் மூலம் அறிமுகமான மென்பொறியாளரிடம் ஒரு கிலோ கஞ்சாவை ரூ.30 ஆயிரத்துக்கு வாங்கி அதை சிறு பொட்டலங்களாக்கி ரூ.60 ஆயிரத்துக்கு விற்று வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இவரது பின்னணியில் உள்ள போதை கடத்தல் கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: விமான பயணிகளுக்கு குட் நியூஸ்… இனி தூத்துக்குடி - சென்னை ஈசியா பறக்கலாம்!!