தமிழகத்தில் அரங்கேறி வரும் கொலை குற்றங்களை தடுக்க திமுக அரசு தவறி விட்டதாகவும் சட்ட முழங்கை பாதுகாக்கவில்லை என்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கொலை குற்றங்களை கண்டித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், மதுரை அருகே திமுக நிர்வாகியின் உறவினர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், சிறையிலிருந்து தீட்டப்பட்ட சதியைக் கூட தடுக்க முடியாமல் குறட்டை விட்டு திமுக அரசு தூங்குவதாக விமர்சித்துள்ளார். திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளத்தைச் சேர்ந்த காளீஸ்வரன் என்ற ரவுடி நள்ளிரவில் அவரது வீட்டு வாயிலில் வைத்து கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்றும் தமிழ்நாட்டில் திட்டமிட்ட படுகொலைகள் நடக்காத நாளே இல்லை என்று கூறும் அளவுக்கு நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் அதைத் தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் 5 கொலைகள்.. புள்ளிவிவரம் காட்டும் பாமக தலைவர் அன்புமணி..!

கொலை செய்யப்பட்ட காளீஸ்வரன் மதுரை மாநகர திமுக நிர்வாகி வி.கே.குருசாமியின் உறவினர் என்று சுட்டிக்காட்டிய அன்புமணி, அவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. காளீஸ்வரனுக்கும், அவரது எதிர் குழுவினருக்கும் இடையே தொடர்ந்து நடந்து வரும் மோதலில் இதுவரை 15-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். அதன் தொடர்ச்சியாகவே இந்த படுகொலையும் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது எனக் கூறிய அவர், காளீஸ்வரனின் எதிரிகள் சிறையில் இருந்த படியே சதித்திட்டம் தீட்டி இந்தக் கொலையை நடத்தியிருப்பதாகவும் தெரிகிறது என தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளார்.

தமிழ்நாட்டில் கொலைகள் நடக்கும் போதெல்லாம் அவை தனிப்பட்ட காரணங்களுக்காக நடத்தப்பட்டது என்றும், கொலையாளிகளை விரைவாக கைது செய்து விட்டோம் என்றும் கூறி சிக்கலை திசை திருப்புவதையே திமுக அரசு வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது என்று குற்றம் சாட்டினார். ஆனால், காளீஸ்வரன் விவகாரத்தில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது தெரிந்தும் கூட, சிறையிலிருந்து தீட்டப்பட்ட சதித் திட்டத்தை முறியடிக்க முடியாமல் திமுக அரசு தோல்வியடைந்திருக்கிறது என்றும் திமுக ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் மட்டும் 6597 படுகொலைகள் நடந்துள்ளன.

இந்த எண்ணிக்கை அச்சமூட்டும் வகையிலும், கவலையளிக்கும் வகையிலும் இருக்கும் போதிலும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களைத் தடுத்து தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க முடியாமல் திமுக அரசு குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருக்கிறது என்று விமர்சித்தார். இனியாவது திமுக அரசு அதன் உறக்கத்தைக் கலைத்து தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: மோசடியாக பதிவு செய்யப்பட்ட BS-4 வாகனங்கள்.. அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு..!