சேலம் மாவட்டம் ஓமலூர் காடையாம்பட்டி அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி அருள்மிகு திரௌபதி அம்மன் திருக்கோயில் அமைந்து உள்ளது. இந்த கோயிலில் பல ஆண்டுகளாக திருவிழா நடைபெறாத நிலையில் ஊர்மக்கள் ஒன்று கூடி இந்த ஆண்டு திருவிழா நடத்துவதாக முடிவு செய்தனர். அதன்படி பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருவிழா தொடங்கியது. ஊர் மக்கள் அனைவரும் உற்சாகமாக பங்கு பெற்றனர்.
நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் 15 ஆம் நாள் திருவிழாவான நேற்று, முக்கிய நிகழ்வாக அம்மனுக்கு சீர் கொண்டு வரும் நிகழ்ச்சி இரவு நடைபெற்றது. சீர் கொண்டு செல்லும் நிகழ்வில் பட்டாசு வெடித்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மீதமுள்ள பட்டாசுகளை பைக்கில் வைத்து எடுத்து வந்துள்ளனர்.

சீர் கொண்டுவரும் ஊர்வலம் ஆனது சென்று கொண்டிருந்தபோது தாராபுரம் கிராமம் பழைய சினிமா தியேட்டர் பகுதியில் பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறி உள்ளன. அப்போது ஏற்பட்ட விபத்தில் இரண்டு சக்கர வாகனத்தில் பட்டாசு வெடியுடன் வந்த வாகனமும் சேதம் அடைந்தது. இதில் கஞ்சநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன் கார்த்திக் 14 வயது சிறுவன் தமிழ்ச்செல்வன் 29 வயதுடைய செல்வராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 20 வயதான லோகேஷ் படுகாயம் அடைந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
இதையும் படிங்க: அதை பத்தி வாயே திறக்கக்கூடாது.. மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்ட்ரிக்ட் உத்தரவு போட்ட எடப்பாடி..!

சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஓமலூர் டிஎஸ்பி சஞ்சீவிகுமார் மற்றும் தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையை தொடங்கினர். சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கௌதம் கோயல் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பட்டாசு வெடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிதியுதவியையும் அறிவித்துள்ளார்.

கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். இந்த நிலையில் அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதாத் என்றும், நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 4 பேர் பரிதாபகரமாக உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் ,கோயில் திருவிழாக்களில் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்பதாலும் , முறையான பாதுகாப்பும் கொடுப்பதில்லை என்பதாலும் இதுபோன்ற விபத்துகளுக்கு தொடர்கதையாகி விட்டது.
எங்கும், எப்போதும் அலட்சியப் போக்குடனே செயல்படும் ஸ்டாலின் மாடல் விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கான நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும்; இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாவண்ணம் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதற்கு உரிய ஆவன செய்ய வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: இந்தியாவே அழுதுக்கிட்டு இருக்கு இரவு விருந்து தேவையா..? இபிஎஸ் மீது குவியும் விமர்சனங்கள்..!