நொய்டாவைச் சேர்ந்த இளைஞருக்கும் அவருடைய மனைவிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுக் கொண்டனர். இதன்பிறகு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்காக டேட்டிங் செயலி மூலம் அந்த இளைஞர் காதலியைத் தேடியுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் டேட்டிங் செயலி மூலம் அனிதா என்கிற பெண் அவருக்கு அறிமுகமானார். ஹைதராபாத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணும் நொய்டா இளைஞரும் செல்போனில் பேசியும் சாட்டிங் செய்தும் காதலை வளர்த்தனர்.

இருவரும் எதிர்காலம் குறித்தும் திட்டமிட்டனர்.
இதனையடுத்து அனிதாவின் அறிவுறுத்தல்படி குறிப்பிட்ட டெலிகிராம் கணக்கில் நொய்டா இளைஞர் இணைந்தார். அவர் சொன்ன செயலி வாயிலாக முதலில் ரூ.3.20 லட்சத்தை இளைஞர் முதலீடு செய்தார். இதன்மூலம் அவருக்கு ரூ.24,000 லாபம் கிடைத்தது.
இதனால் ஹைதராபாத் காதலி மீதான நம்பிக்கை இளைஞருக்கு அதிகரித்தது. காதலி அனிதா வழிகாட்டலில் பல்வேறு திட்டங்களில் அவர் பல கோடிகளை முதலீடு செய்தார். இப்படி டிசம்பர் முதல் இந்த மார்ச் முதல் வாரம் வரை மொத்தம் ரூ.6.3 கோடியை பல்வேறு திட்டங்களில் அவர் முதலீடு செய்தார்.
இதையும் படிங்க: தொகுதி மறுவரையறை விவகாரம்.. கோடு போட்ட ஸ்டாலின்.. ரோடு போடும் ரேவந்த் ரெட்டி..!!

இதன்மூலம் அவருக்கு ரூ.2 கோடி லாபம் கிடைத்திருப்பதாக டெலிகிராம் செயலி வாயிலாக அவருக்கு தகவல் வந்தது. லாபத் தொகையை நொய்டா இளைஞர் பெற விரும்பியபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவருக்கு லாபப் பணம் கிடைக்கவில்லை. அவர் இணைந்திருந்த டெலிகிராம் செயலி திடீரென மூடப்பட்டது. உடனே ஹைதராபாத் காதலிக்கு அவர் போன் செய்தார். செல்போனும் அணைக்கப்பட்டிருந்தது. அவரது சமூக வலைதள கணக்குகளும் மூடப்பட்டிருந்தன. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நொய்டா இளைஞர் சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "டேட்டிங் செயலி மூலம் இளைஞர் ஏமாற்றப்பட்டுள்ளார். அவர் முதலீடு செய்த ரூ.6.3 கோடி 25 வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். ஒட்டுமொத்த சேமிப்பையும் அந்த இளைஞர் இழந்திருக்கிறார். நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளன. பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சைபர் மோசடி..! 50 லட்சத்தை இழந்த முதிய தம்பதி தற்கொலை..!